கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்
கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ.
தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் நூலுக்கு அணி சேர்க்கின்றன. ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற தமிழின் முதல் புதினத்தை படைத்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அடைக்கலம் அடிகள், பேச்சிலும், எழுத்திலும் தனிமுத்திரை பதித்த பொ.ம.ராசமணி, சாலமன் பாப்பையா, தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்களை எழுதிப்பெயர் பெற்ற மெர்வின் என 155 கிறிஸ்தவ எழுத்தாளர்களைப் பற்றிய விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.
—-
அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி.எல்.முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
அறிஞர் அண்ணா, பெரியார், ராஜாஜி ஆகியோர் பேசிய பேச்சுக்களின் ஒரு சில பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.