வள்ளியூர் வரலாறு
வள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ.
தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது வாசிப்போரை வியக்க வைக்கின்றன. நூலில் பின்னிணைப்பாக ஐவர் ராசாக்கள் கதை, கன்னடியன் போர், வீணாதிவீணன் கதை, ஆந்திரமுடையார் கதை ஆகியவற்றின் கதைப் பாடல்கள் வடிவங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வள்ளியூர் தொடர்பான மேலும் ஆய்வு செய்ய முயல்வோருக்குப் பேருதவியாக இருக்கும். நன்றி: தினமணி, 18/11/13.
—-
ஸ்ரீ ராமானுஜர் அருளிய வேதப்பொருள் சுருக்கம், சடகோப முத்துசீனிவாசன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ.
மத்திய காலத்தில் வாழ்ந்த ராமானுஜர், வேத வழியில் வைணவ சமயத்தி செப்பனிட்டார். அவர் அருளிய வேதப் பொருள் சுருக்கம் எனப் பொரள்படும் வேதாந்த சங்கிரஹம் என்னும் இந்நூலுக்கு தமிழில் சில உரைகள் காணப்படுகின்றன. எனினும் அவையாவும் வடமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. ஆகையால் தற்காலத்தில் வழங்கும் தமிழில்இந்நூலை தொகுத்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். மேலும் வடமொழிச் சொல்லுக்கு உரிய தமிழ் பொருட்களை சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 4/12/13.