சுவையான சுமைகள்
சுவையான சுமைகள், விஜயா பப்ளிகேஷன்ஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 100ரூ.
இளம் வயதில் கூலி வேலை செய்தவர். சோடா கலர் விற்றவர், கடும் உழைப்பினால் முன்னேறி, இன்றைக்கு கோடீஸ்வரர்கள் வீட்டுத் திருமணங்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு விருந்தளிக்கும் ஏ.எஸ்.ஆர். கேட்டரர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ராஜநளன் என்று புகழ் பெற்ற ஏ.எஸ்.ராஜசேகர்தான் அவர். அவர் தன் சுயசரிதையை சுவையான சுமைகள் என்ற பெயரில் எழுதியுள்ளார். விறுவிறுப்பான நாவல்களைக் கூட தோற்கடிக்கக்கூடிய விதத்தில், புத்தகம் சுவையாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 4/9/2013.
—-
அழைத்தால் வரும் அதிர்ஷ்டம், ஜி. பாலசுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்ன 17, பக். 183, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-676-4.html
மனிதர்களில் பலருக்குத் திறமை இருந்தாலும், மனவளம் இன்மையால் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற முடிவதில்லை. மனதை வளப்படுத்திக் கொண்டால் பக்குவப்படுத்திக் கொண்டால் நோய் இருப்பினும் அவர்களது முன்னேற்றத்திற்கு ஒருபோதும் தடையாகாது. மாறாக அவர்களுக்கு மனநிறைவைத் தந்து நோய்க்கு மருந்தாகவும் அமையும். சாதனைக்கு வயது ஒரு தடையல்ல. 50 வயதில் தொடங்கினால்கூட 70 வயதில் சாதிக்கலாம். ஏனென்றால் ஒரு மனிதனின் சாதாரண செயலாக்க வயது 70 ஆகும் என்பது போன்ற அறிவியல் பூர்வமான தகவல்களும் அறிஞர்களின் கருத்துக்களும் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. என்ன படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் அனுபவமே சிறந்தது. சந்தர்பப்த்தின் மறு பெயர்தான் அதிர்ஷ்டம். தன் மீது அமரும் எந்த ஒரு சிறு பூச்சியையும் அப்படியே மூடி தன்னுள் வைத்துவிடும் தொட்டாச்சிணுங்கி செடியைப் போல, எவர் கிடைத்த வாய்ப்பை அப்படியே பற்றி பயன்படுத்திக் கொள்கிறாரோ, அவரே அதிர்ஷ்டசாலி என்று வாழ்வில் தனக்குக் கிடைத்த பல அனுபவங்களை எடுத்துரைத்து தன்னம்பிக்கை விதைகளை விதைக்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கை நூல்கள் நிறைய வருகின்றன. எளிய எழுத்து நடையில் அன்றாட வாழ்வின் அனுபவ உதாரணங்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ள இந்நூலைத் தன்னம்பிக்கை தரும் டானிக் என்றே சொல்லலாம். நன்றி:தினமணி, 9/1/2012.