தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்
தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ.
மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.
—-
சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை 24, பக். 496, விலை 150ரூ.
சிவபெருமானுக்குரிய விரதங்கள், வழிபாடுகள், கதைகளை உள்ளடக்கிய நூல் இது. ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதி அம்பலத்தானின் மகிமையை எளிய நடையில் விளக்குகின்றன இந்தக் கட்டுரைகள். சிவபெருமானுக்குரிய விரதங்களான அஷ்ட மஹா விரதங்கள் தோன்றிய வரலாறு, விரதத்தின் மகிமை, அனுஷ்டிக்கும் முளை, விரதமிருப்பவர்கள் வழிபட வேண்டிய ஆலயங்கள், எவரெல்லாம் இந்த விரதங்களைக் கடைப்பிடிக்கலாம் என்பதை எளிய நடையில் தந்துள்ளார் நூலாசிரியர். மேலும், தீப வழிபாடு தொடர்பான அனைத்து விஷயங்களும் தரப்பட்டுள்ளன. பூஜை செய்யும் முறை, பாட வேண்டிய பாடல்கள் என அனைத்தும் படிக்க சுவையாக அமைந்துள்ளன. சிவனும் சக்தியும் இணைந்து காட்சி தரும் திருத்தலங்கள் தோன்றிய விதம், புராணக் கதைகள், கோயிலின் வரலாறு, ஆலயத்தின் சிறப்பு, திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள், வழிபாட்டு முறைகள், வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் என பக்தர்கள் விரும்பும் தகவல்கள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எட்டு வகை லிங்கங்களை நிறுவியவர்கள் பூஜித்தவர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பானவை. சிவ சின்னங்களான திருநீறு அணியும் முறை, அவற்றின் பல்வேறு பெயர்கள், திருநீறு அணிவதால் விளையும் பயன்கள், வரலாற்றுக் கதைகள் போன்றவையும், ருத்ராட்சம் அணிவதன் பயன், ருத்ராட்ச முகங்களின் மகிமை, அதன் மருத்துவ குணங்கள் ஆகியவையும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. மேலும் பாராயணப் பதிகங்களான தேவாரம், ஸ்ரீ மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம், திருஞான சம்பந்தர் அருளிய சிவ பதிகங்கள், அஷ்டகங்கள், போற்றி என சிவபெருமானை வழிபடத் தேவையான அனைத்தும் ஒரே நூலில் அமைத்துத் தந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமணி, 2/2/2014.