மெழுகாய் கரையும் பெண்மைகள்
மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ.
ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், தன்னுடைய கடமையை தவறாமல் செய்து, அதனாலேயே மகனின் வெறுப்புக்கு ஆளான பெண்ணின் கதையைப் பேசுகிறது. இந்த நாவல்கள், மிகவும் வித்தியாசமான பாத்திரப் படைப்புகளையும், சம்பவங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், அவர்கள் மீது திணிக்கப்படும் நில கட்டுப்பாடுகள், இவற்றை ஆசிரியை நன்றாக சித்திரிக்கிறார். நல்ல குறுநாவல்கள். -எஸ். குரு. நன்றி: தினமலர், 28/12/2014.
—-
சிற்றிலக்கிய வகையும் வகைமையும், பாரி புத்தகப் பண்ணை, சென்னை, விலை 80ரூ.
பிள்ளைத்தமிழ், கலம்பகம், பரணி, கோவை, அந்தாதி, உலா, தூது போன்றவை சிற்றிலக்கிய வகைகளாகும். இந்த நூலில், திருப்பாவை, தமிழ் விடு தூது, அபிராமி அந்தாதி, கலிங்கத்துப் பரணி, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களில் காணப்படும் இலக்கிய நயங்களை டாக்டர் கி. ஆதிநாராயணன் சுவைபடக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/12/2014.