கடல் குதிரைகள்
கடல் குதிரைகள், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 240, விலை 175ரூ.
மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இந்நூலாசிரியர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று பல புதினங்களைப் படைத்துள்ளார். அவற்றில் பல இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளும், மத நம்பிக்கைகளும் பின்னப்பட்டு, யதார்த்தத்தை வெளிப்படுத்துபவை. குறிப்பாக, உண்மை நிகழ்வுகளை வைத்தே கற்பனைக் கதைகளை உருவாக்குவது இவரது பாணி.
இந்நூலிலுள்ள எட்டு நெடுங்கதைகளும் இதே பாணியில் அமைந்துள்ளது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘கடல் குதிரைகள்’ என்ற முதல் கதை, கடத்தலைப் பற்றி ‘இந்தியா டுடே’யில் வெளியான ஒரு கடற்கரையின் பின்னணியில் உருவானது. கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டைகள் போன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு கடத்தப்படுவதால், அவை அழிந்து வருகின்றன. அதைத் தடுப்பதற்காக இக்கதையின் நாயகன் நெடுமாறன் மதுரையிலிருந்து மரைக்காயர் பட்டினம் வருகிறான். அவனுக்கு அவ்வூரிலுள்ள சாஹிபு மரைக்காயர் நண்பராகிறார். அவர்களின் முயற்சி வெற்றியா, தோல்வியா என்பதை இக்கதை விளக்குகிறது.
இதேபோல் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள ஒலக்கூர் அக்ரஹாரத்தில் இருந்த காவல்நிலையம், சென்னை நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டதைக் கருவாக்கி, ‘அக்கிரஹாரத்து போலீஸ் ஸ்டேஷன்’ என்ற இன்னொரு கதை புனையப்பட்டுள்ளது. அதில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அநியாயங்களை சுட்டிக்காட்டுவதோடு, அதன் பின்னணியில் இரு உள்ளங்களின் இணைப்பு சாத்தியமானதையும் விவரிக்கிறது.
இப்படி வேத முகமூடிகள், ரயில் சிநேகம், தப்புத்தாளங்கள், அரண்மனைக்காரத் தெரு, ஜமாபந்திமைக்கூடு, பச்சை விளக்குகள் ஆகிய எட்டு நெடுங்கதைகளும், நல்ல கருத்துக்ளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளத பாராட்டத்தக்கது.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026611.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
-பரக்கத்.
நன்றி: 2/5/2018.