முகம்மது பின் துக்ளக்
முகம்மது பின் துக்ளக் (கோமாளியாக்கப்பட்ட கோமான்), செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், பக்.144, விலை ரூ.100.
கி.பி.1325 இல் இருந்து கி.பி.1351 வரை டில்லியில் ஆட்சி செய்தவர் முகம்மது பின் துக்ளக். திரைப்படம், நாடகம், புதினங்களில் அவர் கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் 1971 இல் வெளிவந்த “முகமது பின் துக்ளக்’ திரைப்படத்திலும் அவர் கோமாளியாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.
முகமது பின் துக்ளக் பற்றிய உண்மையான வரலாற்றை இந்நூல் கூறுகிறது. இபின் பதூதாவின் பயணக் குறிப்புகளிலான வரலாற்று நூலில் முகமது பின் துக்ளக் பற்றிக் கூறப்பட்டிருந்த கருத்துகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதையும் இந்நூல் ஆராய்கிறது.
அடிக்கடி தலைநகரை மாற்றி மக்களை அவர் இடம் பெயரச் செய்து கொடுமைப்படுத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டை ஆராயும் நூலாசிரியர், முகமது பின் துக்ளக் பேரரசின் மையத்தில் தலைநகரை அமைக்க முடிவு செய்துதான் தெளலதாபாத்தை தலைநகரமாக அறிவித்தார் என்றும், மக்களை வற்புறுத்தி இடம் பெயரச் செய்யவில்லை என்றும் கூறுகிறார்.
முகமது பின் துக்ளக் வெளியிட்ட நாணயங்கள் குறித்த தகவல்கள், கொடிய பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் வங்காளம், பீகாரிலிருந்து தானியங்களை வாங்கி அவர் சமாளித்தது, விவசாயத்துக்கென்று தனித்துறையை நிறுவி விவசாயத்தை மேம்படுத்தியது என கோமாளியாகச் சித்திரிக்கப்பட்ட முகமது பின் துக்ளக்கின் உண்மை வரலாறு, இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி, 1/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818