பாலாற்றங்கரை தெய்வங்கள்
பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், பக்.136, விலை ரூ.80.
அக்காலத்தில் பாலி ஆறு எனப்படும் பாலாற்றின் இரு கரைகளிலும் சைவ, வைணவ புண்ணிய திருத்தலங்கள் பல இருந்துள்ளன. அவற்றில் எத்தனையோ ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இருப்பினும் இன்றைக்கும் நிமிர்ந்து நின்று தலப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருத்தலங்கள் அநேகம்!
நவக்கிரகங்களில் அமைந்துள்ள புதன் பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக தம்மை மேம்படுத்திக்கொள்ள காஞ்சியில் உள்ள திருநெறிக்கரைக்காடு ஈசனை வேண்டிப் பெற்றுள்ளார். மற்றொரு அதிசயச் செய்தி, காஞ்சி, கோனேரிக்குப்பத்தில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் மீது கல்லையே அர்ச்சனையாக செய்துள்ளார் சாக்கியநாயனார்.
ராஜேந்திர சோழனின் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் சரித்திர குறிப்புகளோடு பகரும் கல்வெட்டுச் சுரங்கமாகத் திகழ்கிறது திருமுக்கூடல் மும்மூர்த்தி பெருமாள் கோயில். தவம் செய்யும் லட்சுமி தேவிக்கு காவலாக இருக்கிறார் நந்தி, பாலாற்றின் நடுவில் பரமேஸ்வர மங்கலம் என்று அழைக்கப்படும் குன்றில்.
இப்படியாக, விளக்கொளி பெருமாள் கோயில், ஆம்பூர் வீர ஆஞ்சநேயர், துத்திப்பட்டு பிந்து மாதவர், செவிலிமேடு நரசிங்கபெருமான், திருவானைக்கோயில் வாலீஸ்வரர், பாலூர் பதங்கீஸ்வரர், ஜேஷ்டாதேவி வழிபாட்டிற்கு உகந்த ஆத்தூர் முக்தீஸ்வரர் திருக்கோயில் காவேரி பாக்கம் அருகே திருபாற்கடலில் காட்சி தரும் அத்தி ரங்கர் என பட்டியல் நீள விரிகிறது. அரிய படைப்பு!
நன்றி: தினமணி, 24/7/2017.