சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், (ஆன்மீக உலகை வழிநடத்தும் இந்துமதம்), சத்குரு சிவாய் சுப்பிரமுனியசுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாசஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 648, விலை 425ரூ.

இறைவனான நடராசப் பெருமான், ஐந்தெழுத்தில் (நமசிவாய) நடனமாடியே ஐந்தொழில்களையும் நடத்துகிறார் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மை. உலகத் தோற்றத்திற்கு அவரது திருநடனமே மூலகாரணம்.

“ஞானியரும்,யோகியரும், முனிவரும் கடவுளை விவரிக்க இறைவனின் நடனத்தினையே தெரிவு செய்து கூறியதில் சிறந்த காரணங்கள் உள்ளன. நாம் இருக்கும் இருப்பின் அடிப்படையே, சலனம்தான் – அதாவது மூவ்மென்ட் . இந்த அசைவு இல்லையென்றால், பிரபஞ்சம் இருக்காது – இயங்காது. நாம் இருக்கமாட்டோம்; அனுபவம் இருக்காது; ஒன்றுமே இருக்காது.

சிவன் திருநடனம் புரியும் இடத்துக்குப் பெயர் சிற்சபை. நம் சிந்தையில் அவன் ஆடும் கூடம் சிற்சபை. இந்நடனம் நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் நடக்கின்றது” என்கிற நூலாசிரியர், சிவனோடு நாமும் நடனமாடும் வழிகளைக் கூறியுள்ளார்.

நாம் யார்? எங்கிருந்து வந்துள்ளோம்? எங்கே செல்லப்போகிறோம்? சிவனோடு திருநடனம் ஆடுவது என்பதன் பொருள் என்ன? சக்தி வழிபாட்டின் மகத்துவம், மாயை என்ன? சிவனோடு நாம் நடனமாட எப்படிக் கற்பது? சிவனின் சிறப்பியல்புகள், மனிதன் விடுதலை அடைவதற்கான பாதைகள், மறுபிறப்பின் செயல்பாடுகள், தர்மம், பாவம், துயரம், நற்பண்புகள், கணவன்-மனைவியின் கடமைகள், புனிதச் சடங்குகள், சிவாலயங்களின் இயல்புகள், கோயிலுக்குச் செல்ல வேண்டியதன் அவசியம், பூஜையின் முக்கியத்துவம், மந்திரங்களின் மகிமை, சைவ சித்தாந்தம் என 31 மண்டலங்களாகக் பிரித்து, 155 தலைப்புகளில், பன்னிரண்டு உபநிடதங்களின் சாரத்தை இந்நூல் விளக்குகிறது.

அற்புதமான ஓவியங்களுடன் இந்துமதத்தின் பெருமையைப் பேசும் ஞானக் களஞ்சியத்தைத் திறக்கச் செய்யும் ஞானத்திறவுகோல் இந்நூல்!

நன்றி: தினமணி, 6-2-2017.

Leave a Reply

Your email address will not be published.