தென்னிந்தியப் பயிர்கள்
தென்னிந்தியப் பயிர்கள், வி.டி.சுப்பையா முதலியார், வேலா வெளியீட்டகம், பக்.576, விலை ரூ.450.
தமிழகத்தில் விவசாயத்துக்கு போதுமான நீரின்றி, குறைந்த நீரைப் பயன்படுத்தி இப்போது விவசாயம் செய்து வருகின்றனர். இந்நூல் 1956-க்கு முன்பு வரை தென்னிந்தியாவில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்தந்த மண்ணுக்குரிய விவசாய முறைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இதன் நூலாசிரியர் கோவை விவசாய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு தென்னிந்திய அளவிலான பயிர்கள் குறித்த நீண்ட ஆய்வை மேற்கொண்டு இந்நூலைப் படைத்திருக்கிறார்.
அன்றைய காலகட்டத்தில் செய்யப்பட்ட சாகுபடி முறைகள், நெல், கரும்பு, சோளம், வரகு, பயறு வகைகள் என தென்னிந்திய அளவில் விவசாயம் செய்யப்பட்ட 48 பயிர்களின் விவசாய முறைகள், அதற்கேற்ற நில அமைப்பு, இயற்கை உரங்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள், வீரிய விதைகளைத் தேர்வு செய்தல், பருவமழைக் காலத்தில் விதைக்கும் முறை, பயன்படுத்தப்பட்ட கலப்பைகள் என எண்ணிடலங்கா அரிய தகவல்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.
நம் பாரம்பரிய விவசாய முறைகளை மிகத் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையிலான இந்நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எண்ணிலடங்காதவை. பயிர்களின் தாயகம், அவற்றை மதிப்பூட்டு பொருளாக மாற்றும் முறைகள், அவற்றில் உள்ள சத்துக்கள், இயற்கை விவசாயத்தின் மூலம் நிலத்தின் விளைச்சல் வீரியத்தை தக்க வைக்கும் முறைகள் என விவசாயம் தொடர்பான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 28/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818