துளிப்பா: நூறாண்டுகளில்
துளிப்பா: நூறாண்டுகளில், தொகுப்பாசிரியர்: இரா. சம்பத்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.200.
ஜப்பானில் தோன்றிய குட்டிக் கவிதை வடிவமான ஹைக்கூ குறித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
ஹைக்கூ பற்றி ஜப்பானிய கவிதை என்ற கட்டுரை மூலம் 1916-இல் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார். அதிலிருந்து ஒரு நூற்றாண்டுப் பயணம் என்கிற வகையில் இந்தத் தொகுப்பின் பெயர் அமைந்துள்ளது.
இறையைப் பாடுவது, இயற்கையைப் பாடுவது, மனிதனைப் பாடுவது என்று எழுத்தில் எல்லாவற்றையும் கையாண்டு வந்துள்ளதை வரலாறு பூராவும் காணலாம். செய்யுள் வடிவிலே எழுதப்பட்டால்தான் எழுத்து என்ற நியதியிருந்த காலத்தில் கணக்கையும் கால அளவையும் கூட செய்யுள் வடிவில் எழுதுவதற்கு கடபயாதி சங்க்யா என்ற எண்-எழுத்து வடிவை உருவாக்கியது நம் நாடாகும். எனவே குறளையும் ஒளவையையும் ஹைக்கூவாகப் பார்ப்போர் உள்ளனர்.
ஹைக்கூ உள்ளடக்க மாற்றங்களும் கவிதைக் கோட்பாட்டு வளர்ச்சிகளும் என்ற தலைப்பில் ஆ.அருணாசலத்தின் கட்டுரை, இக்கவிதை வடிவத்தின் சரிதத்தைத் தேடுபவர்களின் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். தமிழ் இதழ்களில் ஹைக்கூ வந்த வழியை செவ்வனே தொகுத்திருக்கிறார் மு.முருகேஷ்.
கட்டுரைகள் தொடங்கும் பக்கங்களில் அதனதன் ஆசிரியர் பெயர் இல்லாமை குறையே. இறுதியில் சொல்லடைவில் குறிப்பிட்டுள்ள பல பெயர்கள் உரிய பக்கங்களில் காண்பதற்கில்லை. தவிர்த்திருக்க வேண்டிய பிழை. முரண் கொண்ட மூன்று சிற்றடிகளில் சொல்லின்பத்தையும் கடந்து, நெடிய சிந்தனைக்கு வித்திடும் ஹைக்கூ பற்றி வந்துள்ள கையடக்கமான ஆய்வுத் தொகுப்பெனும் வகையில் இந்நூல் வரவேற்புக்குரியது.
நன்றி: தினமணி,27/9/2018
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027180.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818