தமிழக தொல்லியல் ஆய்வுகள்

தமிழக தொல்லியல் ஆய்வுகள்,  செ.இராசு, வேலா வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.175.

வரலாற்று ஆய்வுகளுக்கு ஆதாரமாகப் பயன்படுபவை கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள். இந்நூலில் இடம் பெற்றுள்ள 27 கட்டுரைகளும் இந்த வரலாற்று ஆதாரங்கள் குறித்த தகவல்களையும், அந்த ஆதாரங்களில் இருந்து நாம் கண்டறியக் கூடிய வரலாற்று உண்மைகளையும் விரிவாக விளக்குகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில், குறிப்பாக உத்தரமேரூரில் கிராம சபைக்குத் தேர்தல் நடந்துள்ளது. கிராம சபைத் தேர்தல் பற்றிய விவரங்களை உத்தரமேரூர், பிள்ளைப் பாக்கம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல், தஞ்சை மாவட்டம் செந்தலை, செய்ஞலூர், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மையான கல்வெட்டுகள் கோயில்களுக்குக் கொடுத்த கொடைகளையே குறிக்கின்றன. கோயிலுக்கு நெல் கொடுத்தல், வரி கொடுத்தல் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. கோயிலுக்கு எண்ணெய், நெய் ஆகியவற்றை அளக்கும்போது எவ்வாறு அளக்க வேண்டும், பூமாலை தொடுக்கும்போது எவ்வாறு தொடுக்க வேண்டும் என்பன போன்ற செய்திகளைக் கூறும் கல்வெட்டுகளும் உள்ளன.

கல்வெட்டுகளின் தொடக்கத்தில் காணப்படும் பகுதி மெய்க்கீர்த்தியாகும். இந்த மெய்க்கீர்த்திகளின் தன்மை எவ்வாறு உள்ளது என்பது ‘மெய்க்கீர்த்தி‘ என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இராசேந்திர சோழனின் இலங்கை வெற்றியை பல மெய்க்கீர்த்திகளில் காண முடிகிறது. கோயில்களுக்கு பல இஸ்லாமியர்கள் கொடை அளித்த தகவல்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றவை குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

மன்னர்களின் வரலாற்றை மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி: தினமணி, 11/6/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026983.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *