ஸ்ரீ ருத்ரம் விரிவுரை
ஸ்ரீ ருத்ரம் விரிவுரை, ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, தமிழில்: க.மணி; , அபயம் பப்ளிஷர்ஸ், பக்.256, ரூ.250
வைதிகர்கள் ஓதும் வேத மந்திரமான ஸ்ரீருத்ரம் என அழைக்கப்படும் சத ருத்ரீயத்திற்கு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஆங்கில விரிவுரை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு பதம் பிரித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் வெறும் அர்த்தம் சொல்வது என்றில்லாமல், ஒவ்வொரு மந்திரத்தின் பலனும் அதன் அர்த்தமும் அதோடு சேர்ந்த குட்டிக் கதைகளும் வேதாந்த விஷயங்களும் புத்தகத்தை வெகு சுவாரஸ்யமாக்குகிறது.
காயிகம், வாசிகம், மானசம் என்ற மூன்று விதமான தெய்வ வழிபாடுகளைச் சொல்லி நாமி (கடவுள்)யைவிட நாமா (அவரின் திருநாமம்)வுக்கு என்ன பலன் என்று விளக்குவதில் ஸ்ரீருத்ரம் மட்டுமல்ல, எல்லா தெய்வங்களின் நாமஜெபத்திற்கான பலன் என்ன என்பது நன்கு விளங்குகிறது. இரண்டாம் அனுவாகத்தில் வரும் "பிரலமான நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய என்று சிவபெருமானைத் துதிக்கும் பெயர்களில் வரும் ம்ருத்யுஞ்சயாய-விற்கு எப்படிக் காலனை விரட்டுபவர் என்பதற்கு உதாரணமாக மார்க்கண்டேயரைப் பற்றியக் குட்டிக் கதை எடுத்துக்காட்டப்படுகிறது.
பசூனாம் பதயே நமஹ – உயிர்களுக்கு தலைவனாக உள்ள பகவானுக்கு வந்தனம் என்ற ஒற்றை விளக்கத்திற்கு எழுதியுள்ள தெளிவுரை அபாரமானது. மனிதர்கள் மிருகங்களை வினோதமாகப் பார்ப்பது போல மிருகங்களும் மனிதர்களை வினோதமாகப் பார்க்கின்றன என்று ஸ்வாமிஜி ஒரு விளக்கம் கொடுத்து, ஆனால் மிருகங்களுக்கு என்னவெல்லாம் உள்ளதோ அவையெல்லாம் மனிதனுக்கும் உள்ளதால் மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய மருந்தை மிருகங்களிடம் சோதித்துத் தருகிறார்கள் என்கிறார்.
வழக்கத்தில் நடப்பதை வேத மந்திரத்தோடு பொருத்தி அர்த்தம் சொன்னது ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் அறிவொளி. ஆங்கிலத்தில் ஸ்வாமிஜி எழுதியதைத் துளிக்கூட அர்த்தம் மாறாமல் அழகு கோணாமல் வெகு நேர்த்தியாக தமிழில் எழுதியிருக்கிறார் பேராசிரியர். க. மணி.”,
நன்றி: தினமணி, 13/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818