என் கடமை – ஊழல் ஒழிக!
என் கடமை – ஊழல் ஒழிக!, நல்லம நாயுடு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்: 216; ரூ. 225.
காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நல்லம நாயுடுவின் வாழ்க்கை வரலாறும், பணிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் குற்றங்களுக்கு எதிராகவும் போராடி வென்ற அவரது அரிய அனுபவங்களும் இந்நூலில் இரண்டு பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நல்லம நாயுடு. மாணவப் பருவத்திலேயே விளையாட்டு வீரராக விளங்கினார். கூடைப்பந்து விளையாட்டில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவர். விருதுநகர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த பின், காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வு பெற்று சீரிய பணியாற்றி, உதவி ஆணையர், காவல் கண்காணிப்பாளர் எனப் படிப்படியாக பதவி உயர்வு பெற்று காவல்துறையில் உயர் பதவிகளை அடைந்துள்ளார். சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது,குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
1985-87-இல் சென்னையில் பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பல் மீது வழக்குப் பதிவு செய்தது, ஊழல் வழக்குகள், கொள்ளை வழக்குகளில் துணிந்து நடவடிக்கைகள் எடுத்தது, விபசாரத்திற்கு விற்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தது எனப் பல சவாலான பணிகளைச் செய்து சாதனை படைத்துள்ளார்.
சட்டம் படிப்பவர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும், காவல்துறையில் பணிபுரிய விரும்புவோருக்கும் இந்நூல் சிறந்த கையேடாக விளங்கும்.
நன்றி: தினமணி, 16/8/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818