ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள்
ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள், எஸ்.சுந்தரேசன், சாந்தி பப்ளிகேஷன்ஸ், பக்.240, விலை ரூ.200.
அனைத்து எதிர்ப்புகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு விசிஷ்டாத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் ஆழமாய் வேரூன்றச் செய்து இந்து சமயத்தை நிலைநிறுத்தியவர் ராமானுஜர். அவர் வாழ்ந்த 120 ஆண்டு காலத்தில் வைணவத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள், படைத்த சாதனைகள் ஆகியவற்றை இந்த நூல் விளக்குகிறது.
அவர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறிப்பாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுதல், அதை தக்க சமயத்தில் அவருக்குத் தெரிவித்து அவரைக் காப்பாற்றுதல் என அவரின் வாழ்க்கைச் சம்பவங்களை மிகவும் நெகிழ்ச்சியாக நூலாசிரியர் விளக்கியுள்ளது சிறப்பு.
ராமானுஜர் மந்திரோபதேசத்தை பகிரங்கப்படுத்தும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஓர் ஆசாரியராக, நிர்வாகியாக அவர் பெரும் புகழ் பெற்றவராக விளங்கினார்.
ஆலய நிர்வாகங்களில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைச் செய்தார். ராமானுஜர் தாம் மட்டும் சாதி சமய வேறுபாடுகளுக்கப்பாற்பட்டவராயிருந்ததோடு நில்லாமல், தம்மைச் சார்ந்தவர்களும் அதே கொள்கைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்பன போன்ற பல விஷயங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
நன்றி: தினமணி, 12/3/2018