இந்துத் தத்துவ இயல்

இந்துத் தத்துவ இயல்,  பக்.128, விலை ரூ.105,  பெளத்தத் தத்துவ இயல் – பக்.200; ரூ.165; ஐரோப்பியத் தத்துவ இயல் – பக்.124; ரூ.105; இஸ்லாமியத் தத்துவ இயல் – பக்.206; ரூ.170; விஞ்ஞான லோகாயத வாதம் – பக்.164; ரூ.135; ஐந்து நூல்களையும் எழுதியவர்: ராகுல் சாங்கிருத்யாயன்; அனைத்து நூல்களும் தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, பெளத்தத் தத்துவ இயல் – தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, ஆர்.பார்த்தசாரதி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

வரலாறு, தத்துவம், அரசியல் என பலதளங்களிலும் புகழ்பெற்ற நூலாசிரியர், உலக அளவிலான தத்துவங்களைப் பற்றிய அறிமுகமாகவும், விமர்சனமாகவும் இந்தியில் எழுதியுள்ள 5 நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இவை. ஒவ்வொரு தத்துவத்தின் தோற்றம், அவை வளர்ந்த வரலாறு, அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றைப் பற்றிய நூலாசிரியரின் விமர்சனங்கள் என்பதாக இந்நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்துத் தத்துவ இயல் கி.மு.1000 -600 காலகட்டத்தில் தோன்றியதென்றும், வேதங்களில் மிகப் புராதனமானது ரிக்வேத மந்திர ஸம்ஹிதாவாகும் என்றும் கூறுகிறார். இந்து தத்துவ இயலில் 100 க்கும் மேற்பட்ட உபநிஷத்துகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஈசா, சாந்தோக்யம், பிரகதாரண்யகம், ஐதரேயம், தைத்ரீயம், பிரஸ்னம், கேணம், கதா, முண்டகம், மாண்டூக்யம், கவுஷீதகி, மைத்ரீ, ஸ்வேதாஸ்வரம் ஆகியவையே அசலானவை எனக் கூறும் நூலாசிரியர், ஒவ்வோர் உபநிஷத்திலும் கூறப்பட்டுள்ள கருத்துகளை விரிவாக எடுத்துக் கூறுகிறார். யாக்ஞவல்கியர், கார்க்கி வாசக்னவி, கவுடபாதர், ஆதி சங்கரர் உள்ளிட்ட ஞானிகளின் சிந்தனை முறைகளை விளக்குகிறார்.

பெளத்த தத்துவ இயலின் அடிப்படைத் தத்துவங்களைப் பற்றியும், கெளதம புத்தர், நாகசேனர் ஆகியோர் இந்திய தத்துவமரபுக்கு அளித்த கொடைகளைப் பற்றியும், புத்தருக்கு முன்பிருந்த தத்துவ மேதைகளின் சிந்தனைகளைப் பற்றியும், இந்தியாவில் புத்தமதத்தின் எழுச்சி, வீழ்ச்சி பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில் தொடங்கி லியோனர்டோ டாவின்ஸி, பர்க்லே, காண்ட், ஹ்யூம், ஹெகல், லுத்விக் ஃபேவர் பாக், கார்ல் மார்க்ஸ் வழியாக பெட்ரண்ட் ரஸல் வரை வளர்ந்த ஐரோப்பிய தத்துவ இயலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த மாற்றங்களை, வளர்ச்சிகளை இந்நூல் விரிவாக விளக்குகிறது.

உலகத் தத்துவ இயலுக்கு இஸ்லாமிய தத்துவ இயல் அளித்த பங்களிப்புகள், ஐரோப்பாவில் நிகழ்ந்த தத்துவப் போர்களைப் பற்றியும் இஸ்லாமியத் தத்துவ இயல் நூல் அறிமுகப்படுத்துகிறது.

மனிதனின் புற வாழ்க்கை அவனுடைய சிந்தனைகளை உருவாக்கிறது; அவனுடைய சிந்தனைகள் புறவாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற அடிப்படையில் விஞ்ஞான லோகாயதவாதம் விளக்கப்பட்டுள்ளது. நவீன அறிவியலுக்கும் லோகாயத வாதத்துக்கும் உள்ள தொடர்புகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகச் சிந்தனைமுறைகளை, அவற்றின் வளர்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்கள் இவை.

நன்றி: தினமணி, 12/3/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *