பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க.மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், பக். 208, விலை 140ரூ.

இந்த நுாலை எழுதியுள்ள தமிழ் பேராசிரியர், முனைவர் க.மங்கையர்க்கரசி, அறிவியல் துறையில் பேராசிரியரோ என்று எண்ணத் தோன்றும் வகையில், அறிவியல் கருத்துக்களைச் செறிவான முறையில் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் கூறியுள்ள முறை, கற்போருக்கு ஆர்வத்தைத் தருகிறது.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள் முதலிய நுால்களில் பொதிந்து கிடக்கும் அறிவியல் கருத்துக்களை, மருத்துவ இயல், மரபியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதவியல், அணுவியல் முதலிய தலைப்புகளில், 12 கட்டுரைகளாக அழகுடன் படைத்துள்ளார்.

அவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. அணுவியல் பற்றிய கட்டுரையில், அணுவின் நுண்மையை விளக்கி, அச்செய்திக்கு அரண் சேர்க்க, திருவாசகம், திருமந்திரம், கம்பன், திருவிளையாடற்புராணம், மணிமேகலை முதலான நுால்களில் இருந்து எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ள முறை, நுாலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை வெளிப்படுத்துகிறது.

பக்கம், 118ல் கூட்டுத் தொகையில், 155 என்பது, 1,055 என அச்சாகியுள்ளது. சொற்கள் பலவற்றில் எழுத்து மாறினால் பொருள் மாறும். நீளம் (நீலம்), முன்னுரை (முன்னரை), உருப்பு (உறுப்பு), இருதேள் (இடுதேள்) போன்று ஆங்காங்கே உள்ள எழுத்துப் பிழைகளை, அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுவார் ஆசிரியர் என எதிர்பார்க்கலாம்.
படித்துப் பயன் பெறத்தக்க மிக நல்ல நுால்.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

–பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன்,

நன்றி: தினமலர், 29/4/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *