புத்திக் கொள்முதல்
புத்திக் கொள்முதல் (சிறுகதைகள்), ஜனநேசன்,பாரதி புத்தகாலயம், பக்.112, விலை ரூ.90.
தினமணி கதிர், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, வண்ணக்கதிர் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 17 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பங்குச் சந்தையில் ஈடுபட்டு பெரிய அளவுக்கு நஷ்டமடைந்த சொக்கலிங்கம், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பின்பு அதிலிருந்து மீண்டு எழுந்ததைச் சொல்லும் ‘புத்திக் கொள்முதல்‘ சிறுகதை, பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ‘பாடம்‘ மற்றும் ‘உதிர்வதற்கல்ல முதுமை‘ கதைகள், காதல் திருமணம் பற்றி கூறும்‘கெளரவம்‘, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பட்டறிவு‘ உடல்நலமில்லாமல் போனதும் ஏற்படும் தேவையற்ற பயத்தைச் சொல்லும் ‘பயவதை‘, வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைத் திருடர்களிடம் இருந்து கைப்பற்றி, நகை உரிமையாளர்களிடம் தராமல் ‘கொள்ளை‘யடிக்கும் காவல்துறையினரைப் பற்றி கூறும் ‘கொள்ளை‘, மதுவால் ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லும் ‘சிதைவுகள்‘ என இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் இன்றைய சமூகப் பிரச்னைகளை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.
பல்வேறுவிதமான வாழ்நிலையுள்ள விதவிதமான மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை, உணர்வுகளை, அவர்களின் பல்வேறு பிரச்னைகளை நூலாசிரியர் கண்டுணர்ந்து சிறப்பான படைப்புகளாக்கியிருப்பது பாராட்டுக்கு உரியது.
நன்றி: தினமணி, 21/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818