சொல் அல்ல செயல்
சொல் அல்ல செயல், அதிஷா, விகடன் பிரசுரம், பக்.264, விலை ரூ. 215.

நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே சமரசப்படுத்திக் கொண்டும் நியாயப்படுத்திக் கொண்டும் இது தவறில்லை என்று செய்யும் பல்வேறு செயல்கள் தவறுதான் என்று ஆணித்தரமாக உடைத்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அதிஷா.
உதாரணமாக, நாகரிக உலகில் கடன் அட்டைகள், ஆடம்பர செல்லிடப்பேசிகள் இவற்றை வாங்குவதற்காக கடன் வாங்கும் அவலத்தை நண்பர் ரவியின் தற்கொலை மூலம் உணர்த்துகிறார்.
வாழ்க்கையில் அனைவரும் தமக்கு விருப்பமானதை விட்டு விட்டு பிறரின் விருப்பத்துக்காக ஓடுவதையும், அதே நேரத்தில் சுதந்திர வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பயணி நித்யாவின் வாக்குமூலமாக வெளிப்படுத்துகிறார்.இன்றைய சமூகம் இணையதளத்துக்கு அடிமையாக இருப்பது, இணையங்கள் நம்மை உளவுபார்ப்பது, நமது உணவுகளை, நமது கலாசாரத்தை தீர்மானிக்கும் விளம்பரங்கள் என சமூக அவலங்கள் எவற்றையும் நூலாசிரியர் விட்டு வைக்கவில்லை. இதற்குத் தீர்வாக சுய பரிசோதனையையும், தனி மனித மாற்றத்தையும் முன்வைக்கிறார்.
அடக்குமுறையை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்வதும், எதிர்ப்புகள் தெரிவிக்காமல் இருப்பதும் பரிணாம வளர்ச்சியில் மனித சமூகத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்வதில்தான் முடியும் என்பதை உறுதியாக முன்வைக்கிறார். உண்மை சுடும் என்பதை படித்திருப்போம், இந்த நூலை வாசித்தால் அது சுடுகிறது.”
நன்றி: தினமணி, 9/12/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029989.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818