ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள்

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள், துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.232. விலை ரூ.220;

பத்திரிகைத்துறையில் நாற்பதாண்டு அனுபவம் உள்ள இந்நூலாசிரியர், தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பலருடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.

முரசொலி அடியார் நடத்திய நீரோட்டம் பத்திரிகையில் பணியில் சேர்ந்ததில் தொடங்கி, மாஃபா பாண்டியராஜனுக்காக ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தது வரை நூலாசிரியரின் எல்லா அனுபவங்களுமே மிகவும் சுவையாக இருக்கின்றன.

குறிப்பாக திமுகவைச் சேர்ந்த ரகுமான் கானும், அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியனும் பேரவை வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு வரை போனது, தனக்கு முதல்வராகும் வாய்ப்பு வந்தபோது வி.என்.ஜானகி, சோவுடன் ஆலோசனை நடத்தியபோது முதல்வர் பொறுப்பு மிகவும் சிரமமானது என்று சோ கூற, காமராஜரும் என்னை மாதிரி படிக்காதவர்தானே என்று ஜானகி கூற சோ, அதிர்ச்சி அடைந்தது, ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகள் சோவுக்குப் பிடிக்காமல் இருந்ததும், பின் விடுதலைப்புலிகள் விஷயத்தில் தன்னைப் போலவே ஜெயலலிதாவும் எதிர்ப்புநிலை எடுத்ததால் சோ அவரை ஆதரித்தது, பின்னர் மகாமக திருவிழா விவகாரம், வளர்ப்பு மகன் திருமண விவகாரம் போன்றவற்றில் சோ முரண்பட்டு விலகியது, ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் முன் இரா.நெடுஞ்செழியன் பல மணி நேரம் குறிப்புகளுக்காகச் செலவிடுவது, மூப்பனார், ரஜினிகாந்த் போன்றவர்கள் அவ்வப்போது திடீரென வந்து சோவைச் சந்திப்பது, பத்திரிகையாளர்களிடம் நிதானமிழந்து பேசிய தலைவர்கள் (கருணாநிதி, ஜெயலலிதா உட்பட) இப்படி ஒவ்வொரு நிகழ்வுமே ஒரு புதிய செய்தியை உள்ளடக்கி இருக்கிறது.

ஒரு பத்திரிகையாளரின் அனுபவப் பதிவுகளாக மட்டும் இல்லாமல். தமிழக அரசியலின் நாற்பதாண்டு போக்கின் குறுக்குவெட்டுத் தோற்றமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. பொருளடக்கம் இல்லாதது ஒரு குறையே.

நன்றி: தினமணி, 29/3/21‘

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031318_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *