இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம்-ஒரு கண்ணோட்டம்
இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம்-ஒரு கண்ணோட்டம், ராகுலன், புதுமைப் பதிப்பகம், பக். 304, விலை ரூ. 180.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு இருந்த கம்யூனிஸக் குழுக்கள், இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கட்சியாக மாற்றப்பட்டது. பிறகு, 64-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது, அதன் பிறகு 1967-இல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உருவானது, தற்போது வரையுள்ள தீவிர, அதிதீவிர குழுக்கள் என நீண்ட பொதுவுடைமை இயக்க வரலாறு 58 சிறு கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் விடுதலைப் போராட்டக் களத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கும், விடுதலைக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபைக்கு ஓர் கம்யூனிஸ்ட் அனுப்பி வைக்கப்பட்ட செய்தியும், கம்யூனிஸ்ட் அமைப்புக்குள் ஓர் அரசியல் தீர்மானத்தை நிறைவேற்ற 500 திருத்தங்களை மேற்கொண்ட மாநாடு பற்றிய அரிய தகவல்களும் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்த தவறுகள் குறித்தான மெல்லிய விமர்சனங்களும் கட்டுரைகளில் உள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் முரண்கள், பிளவுகள், தவறுகளைக் கடுமையாக இந்நூல் விமர்சித்தாலும், கடைசிப் பகுதி- பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்தோடு முடிவடைகிறது.
நன்றி: தினமணி, 5/11/2017