கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை,  பிரியசகி, புக்ஸ் ஃபார் சில்ரன், பக்.208, விலை ரூ.160.

திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தினமணி.காம் – இல் இது தொடராக வெளிவந்தது.

தேசியக்கவின்னு புகழப்பட்ட பாரதி கூட சின்ன வயசுல கணக்கு வகுப்புன்னாலே கணக்கு பிணக்கு ஆமணக்குன்னு ஓடிப் போயிடுவாராம். கணிதமேதை ராமானுஜம் கடைசி வரை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவே இல்லை…இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டால் பிள்ளைகளின் திறனுக்கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க உதவ முடியும். ஆசிரியர்கள் புரிந்து கொண்டால் பிள்ளைகளின் பலத்தைக் கொண்டு பலவீனத்தைப் போக்க முடியும் என்கிறார் நூலாசிரியர்.

மொழித்திறன், கணிதத்திறன், இடம் சார்ந்த காட்சித்திறன், உடல் இயக்கத்திறன், இசைத்திறன், பிறருடன் கலந்து பழகும் திறன், தன்னைத்தானே அறியும் திறன், இயற்கையோடு ஒன்றிக்கும் திறன் ஆகிய எட்டுவிதமான திறமைகளில், மாணவர்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து அவற்றை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஆசிரியர்கள் மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பனவற்றை கதைவடிவில், உரையாடல் வடிவில் இந்நூல் விளக்குகிறது. வாழ்வில் வெற்றியடைந்த பலருடைய வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துக் காட்டி, வாழ்வில் முன்னேற வழிகாட்டுகிறது. பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 5/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *