கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்
கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், சி.விநாயகமூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், பக்.268, விலை ரூ.200.
கபிலர் பல இலக்கியங்களைக் பாடியிருந்தாலும், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இலக்கியம் குறிஞ்சிப் பாட்டுதான்! கபிலருக்கும் வள்ளல் பாரிக்குமான நட்பு, தலைவன்-தலைவியரின் காவியக் காதல், கபிலர் பாடிய-கபிலரைப் பாடிய மன்னர்கள், மன்னர்களை நல்லுரை கூறி நல்வழிப்படுத்திய கபிலரின் அறிவுத் திறன் முதலானவற்றுடன், பலவகையான உயிரினங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுகளையும் குறிஞ்சிப் பாட்டில் காணமுடிகிறது. அவற்றை இந்நூல் விரித்துரைக்கிறது.
இயற்கை வருணனைகளையும், உவமைகளையும் தகுந்த இடங்களில் எடுத்துக்கூறி, 99 வகையான பூக்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, இயற்கை எழிற் காட்சிகளைக் குறிஞ்சிப் பாட்டில் நாடகக் காட்சியாக்கித் தந்த கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் உள்ள பாடல்களுக்கு விளக்கம் தந்திருப்பதுடன், பாடல் தொடர்பான பிற இலக்கியச் செய்யுள்களையும் சான்று காட்டியிருக்கிறார். கடவுளும் பாரியும் ஒன்றுதான் என்பதற்கான எடுத்துக்காட்டு; ஆய் எயினனோடு முருகனை ஒப்பிட்டுக் கூறும் விதம் சிறப்பு.
பதினெண்கீழ்க்கணக்கு தொகுதியிலுள்ள கபிலரின் இன்னா நாற்பது பற்றிய விளக்கமும் உள்ளது. இனிமையில்லாதது, தகுதியில்லாதது, வாழ்க்கைக்கு ஒவ்வாதது, கடுமையானது, கொடுமையானது என இந்நூலில் கபிலர் கூறும் இன்னாதவை எவையெவை என்பதையும் ஒரு பகுதி பட்டியலிடுகிறது.
இந்நூலைச் சிறந்த ஆய்வு நூல் என்றே கூறலாம்!
நன்றி: தினமணி, 2/3/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818