பெண்

பெண் (இந்தியப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்), தொகுப்பாசிரியர் சு.மல்லிகா, நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை , பக்.176,  விலை ரூ. 200 .

இந்தியப் பெண் எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் சிறுகதை தொகுப்பு இந்நூல். இத்தொகுப்பில் தமிழ் முதல் உருது வரை 12 இந்திய மொழிகளின் கதைகள் இடம் பெற்றுள்ளன.

சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவிதமும் சரி, அவற்றின் இயல்பான மொழிபெயர்ப்பும் சரி அவற்றை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக வாஸந்தி, லலிதாம்பிகா அந்தர்ஜனம், அமிர்தா ப்ரீதம், ஆஷா பூர்ணா தேவி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பது சிறப்பு.

கணவனின் அடக்குமுறை காரணமாக மன அளவில் கொந்தளித்த ஜனனி, கணவனைத் தாக்குகிறாள். மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவள், மீண்டும் வீட்டுக்குச் சென்று கணவனுடன் வாழ ஆசைப்படுகிறாள். கணவனோ அவளை விவாகரத்துச் செய்யும் நோக்கத்துடன் ஓராண்டுக்கு அவள் மருத்துவத்தைத் தொடருமாறு மருத்துவரிடம் கேட்டுக் கொள்கிறான், வாஸந்தியின் "தேடல்' கதையில்.

பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் அதை தனது மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுவிடும் மருமகள். அதைக் கண்ணும்கருத்துமாக 5 வயது வரை வளர்த்த முதிய வயது பாட்டி. 5 வயது நிறைவடைந்தவுடன் தனது அப்பா, அம்மா இருக்கும் வெளிநாட்டுக்கு பாட்டியைப் பிரிந்து செல்லும் பேத்தி. தனக்குப் பிறந்த குழந்தைகளே ஒரு வயதில் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும்போது, பேத்தி பிரிவதைத் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என உணரும் அன்னம்மா பாட்டி, லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய "ஆதிமாதாவுக்குக் கிட்டிய சாபம்' கதையில் வருகிறார். இவ்வாறு இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் இன்றைய வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களையும் எடுத்துரைக்கின்றன. குறிப்பாக, பெண்களின் பிரச்னைகள் பல கதைகளின் மையப் பொருளாகியுள்ளன. பெண்களின் வாழ்க்கையை, மன உணர்வுகளைத் துல்லியமாகச் சித்திரிக்கும் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.

நன்றி: தினமணி, 24/5/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *