சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்
சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.444, விலை ரூ.360.
காமராசருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், காமராசரின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக கூறியுள்ளார்.விருதுபட்டி என்ற சிற்றூரில் பிறந்த, ஆரம்பக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத காமராசர், இளம் வயதிலேயே தந்தை இழந்ததும், கடைகளில் வேலை செய்ததும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனைகளை அனுபவித்ததும், பதவியைப் பெரிதாக நினைக்காததும், ஏழை மக்களின் நலன் என்ற அடிப்படையில் முடிவுகள் எடுத்ததும், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக இருந்தாலும் எளிய வாழ்க்கை வாழ்ந்ததும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
எதிரான கருத்துடையவர்களையும் மதிக்கும் அவருடைய பண்பு நூலின் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.காமராசர் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நிறைய பள்ளிக்கூடங்களைத் திறந்தது, இலவசக் கல்வி வழங்கியது, மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கவையாகும்.
விவசாயிகளின் நலனுக்காக வைகை அணைத் திட்டம், அமராவதி திட்டம், மணிமுத்தாறு திட்டம் உட்பட 9 முக்கிய நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தொழில் வளர்ச்சிக்காக பாரத மின்நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சுத்திகரிப்பு நிலையம், குந்தா நீர் மின்திட்டம், பெரியாறு நீர்மின்திட்டம், சென்னை அனல் மின்நிலையம், சேலம் இரும்பு எஃகு ஆலை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
இவையெல்லாம் அவருடையஆட்சிக்கால சாதனைகள் என்றாலும், அவற்றின் அடிப்படையாக எல்லா ஏழை மக்களுக்கும் நல் வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் இந்நூலில் விளக்கியிருக்கிறார்.
நன்றி: தினமணி, 2/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818