சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை

சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை, தொகுப்பாசிரியர்: இளையபாரதி, வ.உ.சி. நூலகம், பக்.624, விலை ரூ.600.

‘சுபமங்களா‘ இதழில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பான இந்நூலில் எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

கலைஞர் மு.கருணாநிதி நேர்காணல் தொடங்கி, மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், லா.ச.ராமாமிர்தம், சுந்தர ராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன், கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, வண்ணநிலவன், செ.யோகநாதன், கலாப்ரியா உள்ளிட்ட 38 பிரபலங்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

கலைஞரின் தந்தை முத்துவேலரே சிறந்த கவிஞராகவும், கதை சொல்லியாகவும், ஆதிக்கத்தை எதிர்ப்பவராகவும் இருந்திருக்கிறார் என்பதை கலைஞருடைய நேர்காணலில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. பக்தி இலக்கியங்களில் ஈடுபாடு இல்லையென்றாலும் தான் அவற்றைப் படிக்காமல் இருந்ததில்லை என்று அவர் கூறுவது, ராஜராஜ சோழன் காலத்தைப் பொற்காலம் என்று கருதுவது எதனால் என்பதற்கான அவருடைய விளக்கம், அவருடைய நாடக, திரையுலக அனுபவங்கள் என கலைஞரின் தனித்துவம் நேர்காணலில் வெளிப்படுகிறது.

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், "சோ' ராமசாமி, ஞானக்கூத்தன், இன்குலாப், வாஸந்தி, அசோகமித்திரன் என பல முரண்பட்ட கருத்துகளை உடைய ஆளுமைகளின் நேர்காணல்கள், தமிழ் இலக்கிய, அரசியல் வெளியில் நிலவிவந்த பல்வேறு போக்குகளை நமக்கு எடுத்துரைப்பனவாக உள்ளன.

நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், திரைப்பட எடிட்டர் பீ.லெனின், பத்திரிகையாளர் என்.ராம், இசை விமர்சகர் சுப்புடு என பல்வேறுதுறைசார்ந்தவர்களின் நேர்காணல்களும் இடம் பெற்றுள்ளன.

சமகால அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த அறிவு பூர்வமான பல்வேறு பார்வைகள் சங்கமிக்கும் இத்தொகுப்பு, தமிழ் அறிவு வெளியில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் என்பதில் ஐயமில்லை. கலை, இலக்கியம், அரசியல், இதழியல் சார்ந்து இயங்கும் அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 13/8/2018.

 

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *