தலைநகர் தில்லி தமிழும் தமிழரும்

தலைநகர் தில்லி தமிழும் தமிழரும், ச.சீனிவாசன்;  காவ்யா, பக்.586; விலை ரூ.600. 

இந்திய நகரங்களுக்குள் நீண்ட வாழ்வியலும், பாரம்பரியமும் உள்ள நகரம் தில்லி. தில்லி தமிழர்கள் பலரும் அவரவர்கள் பார்வையில் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

தில்லி தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வையையும் இந்த நூல் தருகிறது. தமிழர்கள் இடம்பெயர்ந்தாலும், புலம்பெயர்ந்தாலும் தங்களது கலை, கலாசாரம் ஆகியவற்றைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை கட்டுரைகள் எடுத்துச் சொல்லுகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தமிழர்கள் தில்லிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தங்களது மொழி, கலாசாரம், இலக்கியம் போன்றவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க தீவிர முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எனினும் தமிழ் மொழியும், தமிழ் மொழிக் கல்வியும் காலப்போக்கில் சிதைந்து வருவதை நூல் கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ் மொழி கற்பித்த கல்லூரிகளில் தமிழ்த்துறை மூடப்பட்டது குறித்த ஆதங்கம் நியாயமானதே.

தலைமுறைகள் கண்ட தில்லித் தமிழர்கள்' என்ற ரமாமணி சுந்தரின் கட்டுரை, தில்லிவாழ் தமிழர்களை நவீனப் பார்வையில் அணுகியுள்ளது.

தமிழரின் கலை, பண்பாட்டு அடையாளங்களை, திறமைகளை அங்கீகரிக்கும் சிறந்த அமைப்பாக தில்லித் தமிழ்ச்சங்கம் திகழ்ந்து வருவதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கீழ்நிலைப் பணிகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டாலும், உயர் பதவிகளில் இன்னமும் கணிசமான தமிழர்கள் இருப்பது மகிழ்ச்சியடைய வைக்கிறது.

தில்லி தமிழர்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் நூல் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

தினமணி,25/1/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *