திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்
திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர், இனியன் கிருபாகரன், இனியன் பதிப்பகம், விலை: ரூ.300.
திரைக்குப் பின்னாலும் நாயகன்
திராவிட இயக்க இதழ்களை ஆவலோடு சேகரிக்கும் பழக்கமுடைய கிருபாகரனிடமிருந்து வெளிவந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட ஆளுமைகள் பற்றிய புத்தகங்கள் பரவலான கவனம் பெற்றன. இந்த வரிசையில் திரைக் கலைஞர் ஜெய்சங்கர் இணைந்திருப்பது ஒரு சுவாரஸ்யமான கதை. எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட கிருபாகரனை ஜெய்சங்கரோடு இணைக்கும் புள்ளியாக மனிதாபிமானம் இருக்கிறது.
திரைப் பயணத்துக்கு வெளியே ஜெய்சங்கர் செய்த மனிதாபிமான உதவிகளின்பால் ஈர்க்கப்பட்டதிலிருந்து இந்தப் புத்தகத்துக்கான தேடல் தொடங்கியிருக்கிறது. அந்தப் பகுதியை மட்டும் மையப்படுத்திவிடாமல் ஜெய்சங்கரின் முழுமையான வாழ்க்கைச் சித்திரத்தைத் தருவதாகவும் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் கிருபாகரன். ஜெய்சங்கர் அவருடைய திரை வாழ்க்கையிலுமேகூட நிறைய படங்களுக்குப் பணம் வாங்காமல் நடித்த வரலாறு உண்டு. ஜெய்சங்கர் காலகட்டத்தில் ஜேம்ஸ்பாண்ட் போன்ற விஷயங்களையெல்லாம் நமது சூழலுக்கு ஏற்ப மாற்றியபோது, அதுமாதிரியான கதாபாத்திரங்களில் ஜெய்சங்கர் ஜொலித்தார். துப்பறியும் கதைகளுக்குப் பொருத்தமான நடிகராக அவர் இருந்தார்.
கடைசி வரைக்கும் கதாநாயகன் அந்தஸ்து என விருப்பப்படாமல் இருந்ததால்தான், கதாநாயகனுக்கு அப்பாற்பட்ட பாத்திரங்களும் அவரது நடிப்பாற்றலுக்குச் சான்றாக இருக்கின்றன. நடிப்பைப் பொறுத்தவரை அவரது இறுதிக் காலம் வரைக்கும் உத்வேகத்தோடு செயல்பட்டவர். ஜெய்சங்கரின் திரை வாழ்க்கையையும், திரை வாழ்க்கைக்கு வெளியிலான பங்களிப்புகளையும், அருகே இருக்கும் நபர்களோடு பழகிய விதம் பற்றியும், ஜெய்சங்கரைத் திரையுலகமும் வெளியுலகமும் பார்த்த விதம் பற்றியும் என எண்ணற்ற நுட்பமான தகவல்களைச் சேகரித்திருப்பதே ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கிறது. இந்நூல் ஜெய்சங்கர் பற்றிய ஒரு முழுமையான ஆவணம். ஜெய்சங்கர் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்ற வகையில் இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு!
நன்றி: தமிழ் இந்து, 5/6/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818