உலக மக்களின் வரலாறு

உலக மக்களின் வரலாறு , கிரிஸ் ஹார்மன்; தமிழில்: நிழல்வண்ணன், மு.வசந்தகுமார்; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , பக்.1088, விலை ரூ.750.

வரலாறு என்பது ஆட்சியாளர்களின் வரலாறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய காலம், அவர்களுடைய வழித்தோன்றல்களின் காலம் ஆகியவற்றின்போது நிகழ்ந்த நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இந்த நூல், இதற்கு மாறாக வரலாற்றை மக்களின் வரலாறாகக் காண்கிறது.

மனிதன் உயிர் வாழ்வதற்காக மேற்கொண்ட வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள், நிலையான குடியிருப்புகள் தோன்றியது, நேரடி உழைப்பில் ஈடுபடாமல் பிறரின் உழைப்பினால் கிடைத்த மிகை உற்பத்தியை மேலாண்மை செய்யும் நபர்கள் தோன்றியது, அவர்கள் பிறரை விட உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டது உள்ளிட்ட தொடக்க கால வரலாறு, இந்நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

கற்கால நாகரிகம், இரும்புக் கால நாகரிகமாக மாறியது; அதனால் ஏற்பட்ட மாற்றங்கள்- நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தனிப்பட்ட முதலாளிகள் தோன்றுதல், அவர்களின் வளர்ச்சிக்காக அரசுகள் பல்வேறு போர்களில் ஈடுபடுதல், காலனி ஆட்சி முறை தோன்றுதல், காலனியாட்சிமுறையை எதிர்த்து சுதந்திரப் போராட்டங்கள் நடைபெறல் என இந்நூலில் அடுத்த கட்ட வரலாறு விளக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையை எதிர்த்து மக்களின் போராட்டங்கள் அதிகரித்தன. விடுதலைக்கான தத்துவங்களின் தோற்றம், அவற்றின் வளர்ச்சி, உலக அளவில் அவற்றின் தாக்கம் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.

உலக வளங்களைக் கைப்பற்ற முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர் ஆகியவை நிகழ்ந்தது, போருக்குப் பின்னால் உலக அளவில் கம்யூனிச நாடுகள், ஏகாதிபத்திய நாடுகள் என இரு எதிர் முகாம்களாக உலகம் மாறியது, 1990 ஆம் ஆண்டில் கோர்பசேவ் காலத்தில் ரஷ்ய கம்யூனிச அரசு வீழ்ந்தது, இன்றைய உலகமய பொருளாதாரத்தின் ஆதிக்கம் தொடங்கியது வரை உலக மக்களின் வரலாறு மிகத் தெளிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. புதிய கண்ணோட்டத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் மிகச் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 5/4/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.