வழங்க வளரும் நேயங்கள்
வழங்க வளரும் நேயங்கள்,-ஸ்ரீதர்-சாமா,விருட்சம் வெளியீடு, பக்.161, விலை ரூ.120.
தமிழ் இலக்கியத்தில் சிறுகதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக்கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக்கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங்குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், வாக்கு எனும் கதையில் அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கும் தேவியின் மூலம் இன்றைய சமூகத்தின் பெரும்பான்மையான வளரிளம் பெண்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துள்ளார்.
ஆயிரங்காலத்து பயிரான திருமண பந்தத்தின் பின்னால் இருக்கும் துன்பங்களை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது அந்த கதை.
அதேபோல தொகுப்பில் உள்ள 11 கதைகளும் சமூக சூழலால் மனித நேயம் பாதிக்கப்படுவதையும், தனிமனித வாழ்வில் வெளிச்சமும், இருட்டும் சமமாக இருப்பதையும் காட்டும் காலக்கண்ணாடிகளாகவே உள்ளன.
தொட்டில் பழக்கம் மரப்பெட்டி மட்டும் என்ற கதை கடைக்காரர், நுகர்வோர் இருவரையும் சமமான தராசுத்தட்டில் வைத்து எடைபோடுவதாகவும், மிகநுட்பமான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டதாகவும் இருக்கிறது.
வழக்கத்தில் இருந்து மறைந்த சில சொற்கள், மீண்டும் படித்தாலே புரியும்படியான சில சொற்றொடர்கள் என சிலவற்றை மறந்து நாம் இந்த தொகுப்பைப் படித்தால் புதிய அனுபவங்களைப் பெறுவது உறுதி.
நன்றி: தினமணி, 30/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818