அவலங்கள்
அவலங்கள், சாவித்ரி, எதிர் வெளியீடு, விலை 180ரூ.
அவலங்களின் வாழ்வு
கதாசிரியர் பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர். ஒரே நாவலின் அத்தியாயங்கள் என்று கருதும் அளவுக்கு இந்தத் தொகுப்பின் கதைகள் தொடர்கின்றன.
காதல், வீரம், சோகம், நகைச்சுவை அத்தனை உணர்வுகளும் விரவிக்கிடக்கின்றன. இந்திய அமைதிப் படைப்புக்கு இரையான ராணியக்கா, சாதிக்கொடுமைக்கு ஆளான மல்லிகா, மனைவியின் காதில் ஈர்க்குச்சி சொருகியதைக் காணச் சகியாமல் கடையில் வேலை செய்து சிமிக்கி வாங்கிக்கொடுத்த நாதன் நாடு திரும்புகையில் விமானத்திலேயே மனைவியுடன் மரணிப்பது, கடல் புலிப் பிரிவில் சேர்ந்து கண்ணிழந்த அலைமகள் ஆஸ்திரேலியா செல்ல முயன்று கடலில் ஜலசமாதி அடைவது, ஈழப் போராளிக் குழுக்களின் சகோதர யுத்தத்துக்கு சாட்சியான கைரி, களத்தில் பலிகடாவாவது என்று எல்லாக் கதைகளுமே அவலத்தில்தான் முடிகின்றன.
கண் முன்னே வாழ்க்கையைத் தொலைத்த ஈழத் தமிழ்க் குடும்பங்கள் மட்டுமல்ல இக்கரையில் நின்று துடித்த தமிழ்க் குடும்பங்களும் கனத்த இதயத்துடனேயே படிக்கும்படியான கதைகள்.
ஈழத் தமிழரின் இன்னல்கள் தீரவில்லை, தொடருகின்றன என்பதையே இந்தக் கதைகள் பேசுகின்றன.
-சாரி.
நன்றி: தி இந்து, 11/3/2017.