உபசாரம்
உபசாரம் ,சுகா, தடம் பதிப்பகம், பக்.152, விலை ரூ.130.
திரைப்படத்துறையில் பணியாற்றும் நூலாசிரியர் எழுதிய 18 அனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திரைப்படத்துறையில் உள்ள படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலருடனான நூலாசிரியரின் அனுபவங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
நடிகை கல்பனா இவரை உடன் பிறவாத தம்பியாகக் கருதிப் பழகியது, வேலை நேரத்தில் முரண்பாடுகள் எழுந்தாலும் இவர் எடுக்கப் போகும் படத்தில் நடிக்க நடிகர் கலாபவன் மணி விரும்பியது, இவருக்கும் இவருடைய “வாத்தியார்‘’ பாலு மகேந்திராவுக்கும் உள்ள அன்புமிக்க அனுபவங்கள் என நெகிழ வைக்கும் நிகழ்வுகள் இந்நூலில் நிறைய.
எழுத்தாளர் ஜெயகாந்தன், இலக்கிய விமர்சகர் தி.க.சி., வெங்கட்சாமிநாதன், வண்ணதாசன், கவிஞர் கலாப்ரியா உள்ளிட்ட பலருடன் நூலாசிரியரின் அனுபவங்கள் சுவையுடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.
எங்கே நல்ல காப்பி கிடைக்கும்? நல்ல உணவு கிடைக்கும்? என அலைந்து திரியும் நூலாசிரியருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் உணவகங்களில் கிடைத்த சுவையான உணவுகள், அங்கே பணிபுரிபவர்களுடனான அவர்களின் நட்பு, நம்மைக் கவர்ந்து இழுத்துச் செல்கிறது.
திருநெல்வேலியை விட்டு வந்து 22 ஆண்டுகளானாலும், நூல் முழுக்க ஆசிரியரின் திருநெல்வேலி தமிழ், நம்மைத் திக்குமுக்காடச் செய்துவிடுகிறது, ஒன்றிரண்டு திருநெல்வேலிச் சொற்களை நம்மையறியாமலேயே அந்த தொனியில் பேசும் அளவுக்கு.
நன்றி:தினமணி09/1/2017.