பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி
பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி, தமிழில் லா.சு.ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 224, விலை 100ரூ.
இந்திய அரசியல் ஆன்மிகமும் தார்மீகமும் இழைந்ததாகச் செயல்பட வேண்டும் என்று விரும்பிய மகாத்மா காந்தி, தனது ஆசிரமங்களின் கூட்டுப் பிரார்த்தனையின்போதுபாடுவதற்காகத் தேர்ந்தெடுத்த 253 துதிப்பாடல்களின் தொகுப்பே இந்நூல். உபநிடதம், துவாதச பஞ்சரிகம், துளசிதாசர், துகாராம், ஏக்நாத், சூர்தாஸ், கபீர், மீராபாய், ஹரிதாஸ், குருநானக், இஸ்லாமிய சூஃபி பாடல்கள் மற்றும் பெயர் தெரிந்த பெயர் தெரியாத பக்திப் பாடல்கள் (வினோபா பாவே கூட ஒரு பாடல் இடம் பெற்றுள்ளன இந்நூலில்). இப்பாடல்கள் அனைத்துமே மகாத்மா காந்தியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழாக்கியுள்ளார் காந்திய அறிஞர் லா.சு.ரங்கராஜன், சிறப்பான மொழிபெயர்ப்பு. குறிப்பாக, வைஷ்ணவ ஜனதோ, மீராபஜன், சரஸ்வதி தோத்திரம், குர்ஆனில் உள்ள துதிப்பாடல், கிறிஸ்தவ தோத்திரப் பாடல் போன்றவற்றைப் படிக்கும்போது மொழிபெயர்ப்பு என்கிற உணர்வே தோன்றவில்லை. வெறும் பஜனைப் பாடல்கள், அவற்றுக்கான விளக்கங்கள் என்று இல்லாமல், பகவத்கீதையின் பெருமை, ஸ்ரீராமனின் மகிமை இவை பற்றியெல்லாம் காந்திஜி கூறிய அருளுரைகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் காந்திஜிக்கு மிகவும் பிடித்த தோத்திரப் பாடலை ராஜாஜி மொழிபெயர்த்தது, காந்தியின் உறவுக்காரப் பெண் ஒருவர்தான் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை காந்திஜிக்கு அறிமுகம் செய்தது, எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடலைக் கேட்டு காந்தி மனம் திறந்து பாராட்டியது போன்ற பல அரிய தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமணி, 24/11/2014.