நாட்டு வைத்திய களஞ்சியம்

நாட்டு வைத்திய களஞ்சியம், கொ.மா. கோதண்டம், நிவேதிதா பதிப்பகம்,சென்னை 94, பக். 304, விலை 175ரூ.

எடுத்தற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக்கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல் வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற மிளகு, சுக்கு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்து கொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம் என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில் சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். தலைவலி, வயிற்றுவலி, காதுவலி, வாயுத்தொல்லை, நரம்புத் தளர்ச்சி, பெண்களின் நோய்கள், குழந்தைகளின் நோய்கள் போன்ற பல நோய்களை மூலிகைகளின் துணையோடு எவ்வாறு விரட்டியடிக்கலாம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். தலைவலிக்கு மாத்திரைகளைத் தேடாமல் இரண்டு துளி வெற்றிலைச் சாறை மூக்கில்விட்டால் போதும், பாலில் பூண்டைச் சேர்த்து உண்டு வர இரத்தக் கொதிப்பு குணமாகும் என்பன போன்ற எளிய மருத்துவக் குறிப்புகள் நிறைந்துள்ளன. மருந்துகளைச் சுத்தி செய்யும் முறைகள், நாட்டு மருந்துகிள் மருத்துவ குணங்கள் போன்றவற்றையும் விளக்குகிறார். மருத்துவம் செய்து கொள்வது அதிகச் செலவு பிடிக்கும் ஒன்றாக ஆகிவிட்ட இக்காலத்தில், மிகக் குறைந்த செலவில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் நோய்களை நீக்கிக் கொள்ள உதவும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 22/10/2012.  

—-

 

எவரும் செய்யலாம் ஏற்றுமதி, வீ. அரிதாசன், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை, விலை 100ரூ.

ஏற்றுமதி செய்வது பற்றிய அடிப்படையான ஐயங்கள் உள்ளவர்களுக்கான நூல் இது. எளிய பின்னணியில் இருந்து தற்போது ஏற்றுமதி தொழில் சாதிப்பவர்களின் நேர்முகங்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. இறக்குமதியாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த துப்பறியும் நிறுவனங்களைப் பயன்படுத்தும் விதமும் விளக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகங்களின் முகவரிகளும் அடங்கியுள்ளன. நன்றி: இந்தியாடுடே, 17/10/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *