கடமையைச் செய் பலன் கிடைக்கும்

கடமையைச் செய் பலன் கிடைக்கும், வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பக். 376, விலை 200ரூ.

சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்ட அறிவூட்டும் நூல்களை எழுதியுள்ள நூலாசிரியரின் மற்றுமொரு படைப்பு இந்நூல். நாம் நம் கடமையைச் செய்தால், நம்மைப் பின் தொடரும் நிழல்போல், கடமையின் விளைவான நமது உரிமைகளும், தானே நம்மைப் பின்தொடரும் என்கிறார் நூலாசிரியர். சேவை என்பது கடமை என்பதும் ஒன்றே என்று பலரும் கருதுகிறார்கள். இதற்கு ஏற்ப காசு வாங்காமல் செய்வது சேவை. காசு வாங்கினால் வேலை என்கிறார்கள். இது தவறு. இரண்டுமே ஊழியம்தான். சேவை என்கிற ஊழியத்திற்கான கூலி அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் கடமை என்பது காசு உட்பட எதையும் எதிர்பாராதது என்று விளக்குகிறார். ‘ இமயமலையே ஆனாலும், நாம் அதன் மீது உ(ய)ரிய வழிமுறைப்படி ஏறிவிட்டால், அம்மலையும் நம் காலுக்குக் கீழ்தான் என்பதுபோல… என்பது போன்று நூலாசிரியர் கூறும் உதாரணங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. தன்னார்வ அமைப்புகள் சிலவற்றைப் பற்றி அவர் கூறும் கருத்துகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. கோடீஸ்வரன் என்ற பெயரைக் கொண்டவர் பிச்சையெடுக்காத குறையாகவும், ஆரோக்கியம் என்பவர் ஆரோக்கியமில்லாமல் எதிர்மறையாக வாழ்ந்துகொண்டிருப்பதைப்போல, தன்னார்வ அமைப்புகள் வைத்திருக்கும் பெயர்களுக்கு எதிராகவே, அதன் செயல்பாடுகள் இருக்கும். சமூக அக்கறையுடன் வெளிப்பட்டுள்ள வித்தியாசமான சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல். நன்றி: தினமணி, 19/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *