நாடு படும் பாடு
நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ.
சமூக மாற்றத்திற்கு மக்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூகச் சிந்தனையுடன் கூடிய எழுத்தும் முக்கியம் என்பதை இந்த நூலின் கட்டுரைகள் உணர்த்துவதாக அமைந்துள்ளன. கட்டுரைஆசிரியர் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள சமூக, அரசியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும், சமூக அக்கறையுடன் ஆழமான சிந்தனையுடன் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. 51 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் பல கட்டுரைகள் கடந்த கால அரசியல் நிகழ்வுகளைத் தற்போது அசைபோட்டு பார்க்கிறது. கட்சித்தலைவர்கள் ஒழுக்கமாக இருந்தால், மக்கள் பிரதிநிதிகள் ஒழுக்கமாக இருப்பார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஒழுக்கமாக இருந்தால் ஆட்சி நியாயமாக இருக்கும். மக்கள் ஒழுக்கமாக இருந்தால்தான் கட்சித் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒழுக்கமாக இருப்பார்கள் என்பன போன்ற வரிகள் நமது சமூகத் தளத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளன. பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அணுகுமுறையை, அவர்களின் செயல்பாடுகளை கட்சி பேதமின்றி, துணிவுடன் கட்டுரையாளர் விமர்சித்திருப்பது பாராட்டத்தக்கது. சிந்திக்க வைக்கும் நூல். நன்றி: தினமணி, 7/9/2015.