கல்கியின் சிறுகதைக் களஞ்சியம்

கல்கியின் சிறுகதைக் களஞ்சியம், ஏ.கே.எஸ்.புக்ஸ் வேல்டு, பக். 548, விலை 450ரூ.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை, தியாக பூமி போன்ற பெரிய நாவல்களில் வைரச் சுரங்கங்களை வைத்த பேராசிரியர் கல்கி, தன் சிறுகதைகளிலும் அமுதம் தேக்கி வைத்தார்.

சித்ர வேலைப்பாடுகள் செய்தார். தேச விடுதலையும், பெண் விடுதலையும் கல்கிக்கு இரு கண்கள். இவை அவரது சிறுகதைகளிலும் பிரதிபலித்தன.
பழ.சிதம்பரன் என்ற எழுத்தாளர் எழுதினார். கல்கியின் தமிழ் நடை மத்த கஜத்தின் கம்பீர நடையைப் போன்றது. ஜீவ நதியின் நீரோட்டத்திற்கு ஒப்பானது. சிவகாமியின் நடனத்திற்கு இணையானது.

கர்நாடக சங்கீதத்துக்கே சிறப்பாக உரிய கனராகங்களின் ஆலாபனத்தை ஒத்து மனோ தர்ம கற்பனையுடன் இயங்குவது என்ற கருத்து நினைவிற்கு வருகிறது.இந்தத் தொகுதியில், 41 சிறுகதைகள்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். வண்ணக் களஞ்சியம். கருத்துப் புதையல்.

வீணை பவானி என்ற கதை விசேஷமாக சொல்லப்பட வேண்டியது. வீணை பவானி ஒரு இசைவாணி. அருமை கணவர் இறந்து விட்டார் என்ற செய்தி வந்ததும் வைரத்தைப் பொடியாக்கி உண்டு, உயிர் தியாகம் செய்து விடுகிறாள்.

இந்தக் கதையில் அருமையான வர்ணனைகள் உண்டு. பவானியை மற்ற மனிதர்களைப் படைத்தது போல் பிரம்மா படைக்கவில்லை; கல்யாணியையும் மோகனத்தையும், செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார்.

நீர் வேண்டுமானால், பாரும்! பவானி செத்துப்போகும் போது, அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகப் போய்விடும்.பரீட்சையில் தவறிவிடும்போது தற்கொலையை நாடும் மாணவர்களை எண்ணி கல்கியின் காருண்ய உள்ளம் கண்ணீர் சிந்தும்; தற்கொலை (பக். 291) என்ற கதையிலும், ஒற்றை ரோஜா (பக். 383) என்ற கதையிலும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள், தற்கொலை வேண்டாம், உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று அறைகூவி அழைக்கிறார்.

கல்கி என்ற மகா மேருவின் உச்சி வரை சென்று உன்னதம் அடையுங்கள். இலக்கியப் பொக்கிஷம்!

– எஸ்.குரு

நன்றி: தினமலர், 8/9/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029581.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *