ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு
ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு – 12 தொகுதிகள்; பதிப்பாசிரியர்கள்: மு.இராஜேந்திரன், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, மொத்த பக்கங்கள்: 5190, விலை ரூ.8,400;
தென்னிந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநர்கள் 4 பேரிடம் துபாஷியாக இருந்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளை. குறிப்பாக 12 ஆண்டுகள் ஆளுநராக இருந்த துயூப்ளேக்சின் காலத்தில் ஆனந்த ரங்கப்பிள்ளை தலைமை துபாஷியாகப் புகழின் உச்சத்தில் இருந்தவர்.
1736 செப்டம்பர் 6 -ஆம் நாள் தன்னுடைய கைப்பட தினப்படி செய்திக் குறிப்புகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து 25 ஆண்டுகள் அவருடைய கடைசி நாள் வரை (ஜனவரி 12, 1761) தொடர்ந்து தினம்தோறும் எழுதி வந்திருக்கிறார். இதை 18 ஆம் நூற்றாண்டின் முதல் உரை நடை இலக்கியம் என்று சொல்லலாம்.
அன்றாடம் நடந்த செய்திகளுக்கு ஊடே ரங்கப்பிள்ளை ஐரோப்பிய , டெல்லி, ஹைதராபாத் அரசியலை எழுதியிருக்கிறார். ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்த எடுக்கும் நடவடிக்கைகள், உள்ளூர் ஆட்சியாளர்கள் ஐரோப்பியர்களின் கைப்பாவையாக இருந்த அவலம், போர்க்காலங்களில் மக்கள் சந்தித்த துயரங்கள், கடல் வாணிகம், துணி வர்த்தகம், எளிய குற்றங்களுக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனைகள், பெய்த பெரும் மழைகள், மூக்குக் கண்ணாடி கேட்டு காகிதம் எழுதும் நவாபு என ரங்கப்பிள்ளை எழுதும் செய்திகள், தீர்மானிக்கவே முடியாத திசைகளிலெல்லாம் சுவாரசியங்களோடு விரிந்து செல்கின்றன.
இது தமிழுக்கு அரிய பல சொற்களை அள்ளிக் கொடுக்கும் சொற்களின் சுரங்கம். மக்களின் வாழ்க்கை முறை, சாதி அடுக்குகள், நிர்வாக முறைமை, அறம், அரசியல் என அள்ள அள்ளக் குறையாத வரலாற்றுச் செய்திகளும், உரைநடையின் சுவாரசியமும் கொண்ட பொக்கிஷம். வாசிப்புக்கு லகுவாக, கடினமான சொற்களுக்கான விளக்கங்களுடன் ஆங்காங்கே வரலாற்றுக் குறிப்புகளுடன் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நன்றி: தினமணி, 16/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818