அழகிய மரம்
அழகிய மரம், தரம்பால், தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்குப் பதிப்பகம், மொத்த விலை: ரூ.900.
ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய மரம்’ புத்தகமும், இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய நதி’ புத்தகமும் விரிவாக விவரிக்கின்றன.
அழகிய மரம்
பிரிட்டிஷார் வந்த பிறகுதான் நம் நாட்டில் கல்வி பரவலானது என்பதான பிரமையை பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலேயே தொகுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விரட்டுகிறார் தரம்பால். ஐரோப்பிய நாடுகள் கல்வியில் வளர்ச்சி அடையாதபோதே இந்தியாவில் கல்வியும் கலைகளும் மட்டுமல்லாமல் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தது என்பதை நிறுவுவதே தரம்பாலின் அடிப்படை நோக்கம். அவரை அந்தப் பணியில் இறக்கிவிட்டவர் மகாத்மா காந்தி. 1931 அக்டோபர் 20-ல் லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸில் உரையாற்றிய காந்தி, “இந்தியாவில் கடந்த 50-100 ஆண்டுகளாகக் கல்வி அழிந்துவருவதற்கு பிரிட்டிஷாரே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார். காந்தியால் பணிக்கப்பட்ட தரம்பால், பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாக்கியிருக்கிறார். எல்லோரும் நினைப்பதற்கு மாறாக, நாட்டின் அனைத்து திசைகளிலும் கல்வி – பழங்குடிகள் உட்பட – அனைத்து சாதியினருக்கும் வழங்கப்பட்டிருப்பதும், விரும்பியவர்களுக்கு வெளியூர்களிலும் வெளி மாநிலங்களிலும்கூட கல்வி நிலையங்களில் உணவு, இருக்க இடம் தந்து கல்வி கற்பித்ததையும் தெரிவிக்கிறது.
வெளிநாடுகளிலிருந்தும்கூட மாணாக்கர்கள் இங்கே வந்து கல்வி கற்றுள்ளனர். கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கைதான் எல்லாப் பகுதிகளிலும் மிக மிகக் குறைவாக இருந்திருக்கிறது. பெண்கள் வீடுகளிலேயே கல்வி பயின்றார்கள் என்ற அனுமானமும் தரவுகளில் இடம்பெற்றுள்ளது. வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக்கூடம், அந்தந்தப் பாடங்களுக்கு ஆசிரியர், தலைமை ஆசிரியர், கல்விக்கான பாடத்திட்டம், பொதுத் தேர்வு முறை, சான்றிதழ் என்று கல்வியை பிரிட்டிஷார் முறைப்படுத்தியதும் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், பொறியியல் என்று கல்வி விரிவடைந்ததும் சாதாரணம் அல்ல. ஆனால், பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு இந்திய சமூகத்தில் கல்வி வளர்ச்சியே இல்லை என்பது கட்டுக்கதையே என்பதை நிறுவும் இந்நூல் அதன் அடிப்படையில், விவாதத்தைக் கட்டமைக்க உதவுகிறது.
நன்றி. தமிழ் இந்து. 22.02.2020
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9789386737861_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818