பாகவதப் பாரதம்
பாகவதப் பாரதம், சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.592, விலை ரூ.600;
வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ- கெளரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் “பாகவதப் பாரதம்” என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. அந்த ஓலைச்சுவடியில், அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில் அதனை சுவடியிலுள்ள செய்யுள் வடிவிலேயே நூலாக்கும் முயற்சியில் நூலாசிரியர் ஈடுபட்டு வருகிறார். அதற்கு முன்னதாக, தனது சுவடி ஆராய்ச்சிக்கு உறுதுணையாக, அதன் உரைநடை வடிவத்தை வெளியிட்டிருக்கிறார். அதுவே இந்நூல்.
மகாபாரதத்தில் போர்க்களத்தில் எதிரிகளாய் நின்ற உற்றார், உறவினரைக் கண்டு மெய்சோர்ந்து நின்ற அர்ஜுனனைத் தெளிவுபடுத்த பகவத்கீதையை பரந்தாமனான கிருஷ்ணன் உபதேசிக்கிறான். அந்த இடத்தை சற்றே மாற்றி, பகவத்கீதைக்குப் பதிலாக, தனது அவதார மகிமைகளை அர்ஜுனனுக்கு கிருஷ்ணரே கூறுவதுபோல, பாகவதத்தின் கிருஷ்ணாவதாரம் தவிர்த்த ஒன்பது அவதாரங்களின் கதைகளைக் கூறுவதாக, பாகவதப் பாரதம் அமைந்திருக்கிறது.அதேபோல, வியாச பாரதத்தில் உள்ள சில நிகழ்வுகளும் இந்த ஓலைச்சுவடி காப்பியத்தில் மாற்றப்பட்டிருக்கின்றன.
மகாபாரதக் கதையின் மூலம் மாறுபடாதபோதும், கதாசிரியரின் கற்பனைக்கு ஏற்றவாறு பல இடங்களில் பாகவதப் பாரதத்தில் மாற்றங்கள் காணப்படுகின்றன. தனது கடுமையான ஓராண்டு உழைப்பால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இனிய வரவாகப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர்.”
நன்றி: தினமணி, 8/2/2021.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818