இந்திய இலக்கியச் சிற்பிகள்
இந்திய இலக்கியச் சிற்பிகள், அசோகமித்திரன், சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.127; ரூ.50;
சாகித்திய அகாதெமியின் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் தமிழின் நவீன எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றிய இந்த நூல், அவருடைய வாழ்க்கை, எழுத்து குறித்த ஒரு சிறந்த அறிமுகம். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அசோகமித்திரனின் அருகிலிருந்து அவரது எழுத்தையும் வாழ்க்கையையும் எழுத்தாளராகவும் நண்பராகவும் கண்டுள்ள சா.கந்தசாமி, இந்நூலை எழுதியிருப்பது மிகப் பொருத்தம்.
அசோகமித்திரன் எழுத்துலகம் தனித்துவமானது. சிறுகதை, நாவல் என புனைகதை வடிவ எழுத்தில் அவர் பெரும் வெற்றி பெற்றவர் என்பதில் யாருக்கும் இரு வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. இலக்கியம், மாநகர வாழ்க்கை, சினிமா பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரைகள் ஒரு தலைமுறையின் தனித்துவமான ஆவணமாகவே கொள்ளலாம். தமிழின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய எந்தத் தொகுப்பிலும் அவரைப் புறந்தள்ள முடியாது.
“கரைந்த நிழல்கள்”, “18-ஆவது அட்சக்கோடு” அதிகம் பேசப்படாத “இன்று” உள்ளிட்ட அவரது நாவல்கள் உருவம், உத்தி, உள்ளடக்கம் என எந்த வகையிலும் தமிழ் நாவல் வரிசையில் தாமாக முன்னிறுத்திக் கொள்பவை. மேலெழுந்த தத்துவம் இல்லாத கதை சொல்லல் அவருடைய பாணி; உரையாடலேகூட அதிகமிராது.
முற்றிலும் கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் இருக்கும் அசோகமித்திரனின் நடை மிக எளியதுபோலத் தோன்றினாலும், அவருடைய படைப்புகளில் சொன்னதைவிட, சொல்லாமல் -எழுதாமல் விட்டது- அதிகம். ஆரம்ப வாசகனுக்கு இது ஓர் உத்தியாகத் தோன்றக் கூடும் என்று சா.கந்தசாமி நம்மை எச்சரிக்கிறார். ஆனால் ஆழ்ந்த, நீண்ட வாசிப்புக்குப் பிறகு, தனது படைப்புகளிலிருந்து எப்போதுமே விலகியுள்ள படைப்பாளியாக அசோகமித்திரன் இருப்பது தெரியும்.
அவருடைய எழுத்துகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டு தொகுக்கப்பட்ட இந்த நூல் மூலமாக, ஒரு சிறந்த இலக்கிய வாழ்வை தமிழ் வாசகனின் முன்பு நிறுத்துவதில் சா.கந்தசாமி வெற்றி அடைந்துள்ளார்.
நன்றி: தினமணி, 15/2/2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031020_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818