இலக்கியத்தில் விருந்தோம்பல்
இலக்கியத்தில் விருந்தோம்பல், இறையன்பு; கற்பகம் புத்தகாலயம், பக்.200; ரூ.175;
விருந்தினரை வரவேற்க புன்னகையே பூங்கொத்து; முகப்பொலிவே பொன்னாடை; கண் மலர்ச்சியே கற்கண்டு; வரவேற்கும் விதம் வழிப்பந்தல் என விருந்தோம்பல் குறித்து தமிழிலக்கியங்களில் உள்ள பல முக்கியத் தகவல்களை இந்த நூல் பதிவு செய்கிறது.
“விருந்தோம்பல் இலக்கணம்”, “அகநானூற்றில் விருந்தோம்பல்”, “நீதி நூல்களில் விருந்தோம்பல்”, “விருந்தோம்பல் அன்றும் இன்றும்” என இருபது அத்தியாயங்களில் விருந்தோம்பல் குறித்து குறிப்பிடப்படும் பல சுவையான செய்திகள் வாசகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.
குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்தல், திருமண நிகழ்வு, வளைகாப்பு என எல்லாவற்றிலும் தவிர்க்க முடியாததாக, விருந்தோம்பல் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். வீர வாளையும் யாழையும் அடகு வைத்து விருந்து பேணிய நிகழ்வைப் புறநானூறு மூலம் காட்டிப் “பணையம்” என்ற சொல்லின் பழைமையைச் சுட்டுவதுடன், கடனுடன் பட்டாவது கல்யாணப் பந்தியைச் சிறப்பிக்கும் மரபின் தொடர்ச்சியையும் புரிய வைக்கிறது.
“விருந்தோம்பலின் மாண்பறியும் வருவிருந்தாகவும், தருவிருந்தாகவும் நாம் உருமாறுகிறோம். வேர்க்க விறுவிறுக்க வெயிலில் வருவோரை முன் சென்று வரவேற்று ஒரு குவளை நீர் கொடுத்து களைப்பாற்றி இளைப்பாற்றும் அக்கலையே இன்றைய தேவை” என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்த நூலை அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும்.
நன்றி: தினமணி, 15/2/2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031019_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818