காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்
காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ், மு.ஞா.செ. இன்பா, கைத்தடி பதிப்பகம், பக். 194, விலை ரூ.125.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கவித்துவ நடையில் விவரிக்கும் நூல்.
சாவித்திரி தன் வாழ்வை, கலைக்கும், காதலுக்கும் அர்ப்பணித்து வாழ்ந்திருப்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.
சாவித்திரி மீது ஜெமினி கொண்ட காதல் உயர்ந்ததா, ஜெமினி மீது சாவித்திரி கொண்ட காதல் உயர்ந்ததா… என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு இருவரின் காதல் உணர்வுகளும் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளன.
சிறு வயதில் நடனம் கற்று, நாடகங்களில் நடித்து வந்த சாவித்திரி தேவதாஸ் படத்தில் பார்வதியாக நடித்தார்.அந்தப் படத்தின் வெற்றி அவரைச் சிறந்த நடிகையாக திரை உலகுக்கு அடையாளம் காட்டியது.சிவாஜியுடன் அவர் நடித்த அமர தீபம், பெண்ணின் பெருமை, பாசமலர், பாவ மன்னிப்பு, நவராத்திரி போன்ற படங்கள் மூலம் அவர் புகழின் உச்சத்தை அடைந்தார்.
எம்ஜிஆருடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசனுடன் மனம் போல மாங்கல்யம் படத்தில் சாவித்திரி நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு ரகசியத் திருமணம் செய்து கொண்டனர்.
மிஸ்ஸியம்மா, களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் சலங்கை, கற்பகம் உள்ளிட்ட பல படங்களில் ஜெமினியுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகையாகப் புகழ் பெற்றதுடன் தமிழில் வெற்றி கண்ட நீர்க்குமிழி, வியட்நாம் வீடு போன்ற படங்களை தெலுங்கில் தயாரித்தபோது, அவற்றின் தோல்வியால் பொருளாதார இழப்பைச் சந்தித்தார். அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை. சம்பாதித்த செல்வங்களை எல்லாம் இழந்த நிலையிலும் கொடை உள்ளத்தோடு வாழ்ந்தார். கடைசியாக, தான் வைத்திருந்த காரையும் ஓட்டுநருக்குப் பரிசாகத் தந்து இருக்கிறார்.
இவ்வாறு சாவித்திரியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை அறிய முடிகிறது.
பல அபூர்வமான புகைப்படங்களும், சாவித்திரியின் மகள், மகன், பேரக்குழந்தைகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு.
நன்றி: 3/6/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818