கோவாவில் மதமாற்றம் துயரக் கதை
கோவாவில் மதமாற்றம் துயரக் கதை, மலையாள மூலம் ரங்கஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 200, விலை 120ரூ.
உலக வரலாறு நெடுகிலும் கட்டாய மதமாற்றம் செய்யும்போது மானுடம் அடைந்த துயரங்கள் அளவிட முடியாதவை.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “விச் ஹன்ட்’ எனப்படும் சூனியக்காரன் வேட்டை, “இன்குவிசிஷன்’‘ எனப்படும் சமயக்குற்ற விசாரணை ஆகிய கொடிய நிகழ்வுகளால், போர்ச்சுகலைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் கோவா மக்களை மிரட்டி கிறிஸ்தவர்களாக மாற்றினர். அப்போது நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய எண்ணத்துடன் கத்தோலிக்கத் திருச்சபை அமைத்த கூட்டணியின் கோர விளைவு அது. சுமார் 450 ஆண்டுகள் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக கொங்கணி மக்கள் நடத்திய சமரும் வரலாற்றின் மறு பக்கமாகும்.
இந்நூலில் போர்ச்சுகீசியர்களின் கொடுங்கோலாட்சி, கொடிய சித்ரவதைகள், பேரழிவுகள், அவற்றை எதிர்த்த மக்களின் தொடர் போராட்டங்கள், இறுதியில் வென்ற மானுடம் ஆகியவற்றின் பதிவுகளை நீரோடை போலத் தொகுத்து வழங்கி இருக்கிறார், கேரளத்தை பூர்விகமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ரங்கஹரி.
வரலாற்றுப் பேராசிரியர் சி.ஐ.ஐசக்கின் அணிந்துரை நூலுக்கு மகுடமாக உள்ளது. இறந்த காலத்திலிருந்துதான் எதிர்காலத்துக்கான பாடத்தைக் கற்க முடியும். அந்த வகையில், தமிழில் இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய முக்கியமான நூல் இது.
நன்றி: தினமணி,6/2/2017.