மனிதனை இயக்குவது மனமா மூளையா?
மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீநிவாசன், லஷ்மி மோகன், நலம் வெளியீடு, பக். 128, விலை 125ரூ.
தாயின் வயிற்றில் உள்ள கருவிலேயே மூளையில் நியூரான்கள் உதிக்கத் துவங்கி, குழந்தை கற்கவும் துவங்கி விடுகிறது என்பது இறைவனின் விந்தை.
எந்தக் குழந்தைக்கும் முதல் மூன்று மாதத்திலேயே ஒவ்வொரு வினாடியும், 2,500 நியூரான்கள் உருவாவது, பேதமற்ற முழு முதல் கடவுளின் வித்தை.
குழந்தைப் பருவத்தின், ‘சிதறும் மனநிலை’ முதல், வயோதிகத்தின் இறுதிக்கட்டமான, ‘ஒடுக்கப்பட்ட மனநிலை’ வரை, பல்வேறு காலகட்டங்களில் எண்ணங்களைத் தாங்கி நிற்கும் மூளையின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் முன்வைத்து, மனிதனை இயக்குவது மனமா, மூளையா எனும் புரியாத புதிரை விடுவிக்க முற்படும் நுால் இது.
இதுவரையில் வந்த கணினிகளை விடவும் ஆற்றல்மிக்கதாக விளங்கும் மனித மூளை, 1,400 கோடி நரம்பு செல்களால் ஆனது என்பதும் வியப்புக்குரியது.
மூளையின் குறைபாடுகள் மற்றும் நோய்களுக்கான மூலக் காரணங்கள் போன்ற பல அரிய தகவல்களை உள்ளடக்கி இந்நுாலைப் படைத்திருக்கின்றனர், நரம்பியல் மருத்துவர் ஏ.வி.ஸ்ரீநிவாசன் மற்றும் இசை சிகிச்சையாளர் லஷ்மி மோகன்.
நெஞ்சம், இதயம், மனசு என்றெல்லாம் பொதுவாகக் குறிப்பிடப்படும் மனதுக்கும், உடல் உறுப்பான மூளைக்குமான வேறுபாடு, மனத்தின் சிந்தனைகள் கிளைப்பதற்குக் களமான ஆழ்மனம் மற்றும் மறைமனம், தியானத்தின் பலன்கள், ஒரே நேரத்தில் பல்வகைச் செயல்களில் ஈடுபடும் மனத்தின் ஆற்றல் போன்றவை, சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளன.
மூளையில் இருந்து வெளிப்படும் மின் வீச்சுகளில் ஆல்பா நிலையால் ஏற்படும் பலன்கள், மனமும் ஆன்மாவும் கொண்ட நெருக்கமான தொடர்பு, மூளைக்கும் பக்திக்குமான பிணைப்பு, புலன்களின் எண்ணிக்கை, உள்ளுணர்வுகள், கவனத்திறன் எனப் பலவற்றை யும் புரிய வைக்கும் பயனுள்ள நூல்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/Manidanai_Iyakkuvathu_Manama_Moolaiya.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
– மெய்ஞானி பிரபாகரபாபு
நன்றி: தினமலர், 8/4/2018.