மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்
மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும், கே.எம்.சரீப், சமூக உயிரோட்டம் வெளியீடு, விலை 500ரூ.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை ஆட்சியாளர், முதல் கவுன்சிலர், திவான் முதலான முக்கியப் பதவிகளை வகித்தவர் கலிபுல்லா. விளிம்புநிலை மக்களுக்காக சமஸ்தானத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய முன்னோடி. அவற்றில் முக்கியமானவை, மதிய உணவுத் திட்டமும் தவணை முறைக் கடனில் வீட்டு மனைகள் அளிக்கும் திட்டமும். துரதிர்ஷ்டவசமாக, அவரைக் குறித்த பதிவுகள் அருகிவிட்டன. அவரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு தரவுகளைச் சேகரித்து நூல்வடிவம் வழங்கியிருக்கிறார் கே.எம். சரீப்.
சென்னை ராஜதானியில் கே.வி.ரெட்டி அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் கலிபுல்லா. பெரியார், கி.ஆ.பெ.விசுவநாதம், பி.டி.ராஜன், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெருங்கிய நண்பர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நிலவிய மத ஆதிக்க சக்திகளால் விளிம்புநிலை மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அவற்றைச் சீர்ப்படுத்துவதற்காக, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நிர்வாகம் 1941-ல் கலிபுல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், நாட்டின் மற்ற பகுதிகளைப் போலப் புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற 1946-ல் ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலிபுல்லா. அரிசித் தட்டுப்பாட்டால், கோதுமையை அவர் மாற்று உணவாகப் பரிந்துரைத்ததை மக்கள் வேண்டாவெறுப்பாகத்தான் ஏற்றுக்கொண்டுள்ளனர். திவானின் வரலாறு மட்டுமல்ல, புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்களின் வரலாறும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளது.
புதுக்கோட்டை தனியரசின் சட்டமன்றத்தில்தான் தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் செயல்பட்டுவருகிறது. அக்கட்டிடத்தில் உள்ள ஆவண அரங்கத்தின் மேற்கூரை, கஜா புயலால் தூக்கியெறியப்பட்டதில் பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்கள் சேதமடைந்தன. மிச்சம் இருப்பவையும் கவனிப்பாரற்ற நிலையில்தான் உள்ளன. தற்போது அழியும் நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஆவணக் கட்டுகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையில், புதுக்கோட்டையில் ஆவணக் காப்பகக் கிளை ஒன்றைத் தொடங்க வேண்டும். லண்டன், சென்னை, திருச்சி என்று ஏற்கெனவே திசைகள்தோறும் சிதறிக்கிடக்கும் ஆவணங்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும். அதற்கான தொடர்முயற்சியிலும்கூட கே.எம்.சரீப் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர். வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கட்டும்.
நன்றி: தமிழ் இந்து, 5/2/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818