நதிநீர் இணைப்பின் முன்னோடி
நதிநீர் இணைப்பின் முன்னோடி. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் (பி.ஏ.பி), தொகுப்பாசிரியர்: என்.ஆர்.மகேஷ்குமார், தமிழக வேங்கை வெற்றி, பக்.96, விலை ரூ.130.
காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம்தான் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம். மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கிழக்கு நோக்கி திசைமாற்றி, தமிழகம் – கேரளம் ஆகிய இருமாநிலங்களுக்கும் பயன்படாமல் கடலில் கலந்த நீரை, இரு மாநிலங்களும் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டதுதான் இந்தத் திட்டம். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களும், கேரளத்தின் பாலக்காடு மாவட்டமும், சித்தூர் தாலுகாவும் இத்திட்டத்தால் பாசன வசதி பெறுகின்றன.
ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு, ஆழியாறு, பாலாறு ஆகிய எட்டு ஆறுகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு நதிநீர் இணைப்புப் பாசனத்திட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகமும், கேரளமும் இணைந்து முன்மாதிரியாக செயல்படுத்தியிருப்பது இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை மையமாகக் கொண்டு வனப்பகுதியில் உற்பத்தியாகும் நீரை 10 அணைகள் கட்டி பகிர்ந்து கொள்ளத் திட்டமிடப்பட்டாலும், இன்னும் ஓர் அணை கட்டப்படாமல் இருக்கிறது. அது ஆனைமலையாறு அணைத்திட்டமாகும். கேரள அரசு இடைமலையாறு என்ற அணையைக் கட்டினால்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். 33 ஆண்டுகளுக்கு முன்பே இடைமலையாறு அணையைக் கேரள அரசு கட்டி முடித்த பிறகும், இதுவரை அணையைக் கட்டி முடிக்கவில்லை என்று தெரிவிப்பதால், இந்த ஆனைமலையாறு அணைத்திட்டம் நிறைவு பெறாமல் இருக்கிறது; இதனால் ஒவ்வோர் ஆண்டும் 2.5 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் இழந்து வருவதாகக் கூறுகிறார் நூலாசிரியர்.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படக் கூடிய சுரங்கங்களின் அளவுகள், கட்டப்பட்ட அணைகள், இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு, நீர் மின்நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய கால்வாய்கள், பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு என இத்திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
நன்றி: தினமணி, 4/10/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818