நினைவில் நின்றவை
நினைவில் நின்றவை, இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், பக்.232, விலை ரூ.200.
நூலாசிரியர் இந்திய ஆட்சிப்பணியின்போது தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு 10 தலைப்புகளில் கட்டுரைகளாக வடித்து நூலாகத் தந்துள்ளார். பெருக்கெடுக்கும் வார்த்தை பிரவாகம், பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையான நடை நம்மைக் கவர்கிறது.
பணியில் சிறக்க' என்ற தலைப்பில், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பற்றிய ஒப்பீடு, நிறுவனத்தின் வளர்ச்சி, நிறுவனம் சிறக்க ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், கடும் உழைப்புத் திறன் ஆகியவை குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எல்லையில் கடும் உறைபனி, வெப்பம், பசி, உறக்கமின்மை ஆகியவற்றை பொறுத்துக் கொண்டு நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களைப் பற்றிய ‘எல்லை வீரர்கள்’ குழந்தைகள் வளர்ப்பு, குற்ற உணர்ச்சியால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், பெற்றோர் செய்யக்கூடாதவற்றையும் எடுத்துக்காட்டும் ‘ குற்ற உணர்வு, தமிழின் பெருமை குறித்துப் பேசும் தமிழால் தலைநிமிர்வோம், மனிதராக பிறக்கும் அனைவரும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்; பயணங்கள் வாழ்வை அழகாக்குவதோடு புதிய அனுபவங்களையும் பெற்றுத் தரும் என்று கூறும் பயன் தரும் பயணங்கள் என நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் நம்மை பல திசைகளில் பறக்க வைக்கின்றன.
வைப்போம் வணக்கம், விரட்டுவோம் வறுமையை உள்ளிட்ட பிற கட்டுரைகளும் சிந்திக்க வைக்கின்றன. கல்வியில், பணியில், வாழ்வில் வெற்றி பெற ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
தினமணி,25/1/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818