புவி எங்கும் தமிழ்க் கவிதை

புவி எங்கும் தமிழ்க் கவிதை, தொகுப்பாசிரியர்: மாலன், சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ.160.

புவியின் எட்டுத் திக்குகளிலிருந்தும் பெறப்பட்ட கவிதைகள் சிறப்பாக இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நார்வே, இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்த நூலை பன்முகம் கொண்டதாகவும், அதே நேரத்தில் விரிவின் பொருட்டு செறிவைத் தவறவிடாமல் செழுமை வாய்ந்ததாகவும் ஆக்க நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சியை கவிதைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது.

இலங்கையில் வசிக்கும் கவிஞர் அபார் தாள் கப்பல் என்ற கவிதையில், காகிதக் கப்பல் கட்டி விளையாடும் இளம்பிள்ளைகளின் மனது அற்புதமாகப் பதிவாகியுள்ளது.
இது மட்டுமல்ல, இங்கிலாந்தில் வசிக்கும் நா.சபேசன் எழுதிய நான் காத்திருக்கிறேன், இலங்கையில் வசிக்கும் அனார் எழுதிய இரண்டு பெண்கள், ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் வசிக்கும் அய்யனார் எழுதிய முப்பத்தைந்து டிகிரி விடியல், கனடாவில் வசிக்கும் கவிஞர் வ.ந.கிரிதரன் எழுதிய நவீன விக்ரமாதித்தனின் காலம்' என ஒவ்வொரு கவிதைகளும் மனதை வருடிச் செல்கின்றன.

அதேபோன்று தமிழ்க் கவிதை உலகில் தங்கள் கவிதைகளால் புகழின் சிகரங்களில் உலவும் மூத்த கவிஞர்கள் நுஃமான் (இலங்கை), க.து.மு.இக்பால் (சிங்கப்பூர்), அம்பி (பப்புவா நியூ கினியா) ஆகியோரின் கவிதைகள் இந்த நூலை கனப்படுத்துகின்றன. தேசங்கள்தோறும் தேர்ந்தெடுத்த பூக்களைக் கொண்டு தலைசிறந்த கவிதைப் பூமாலையை உருவாக்கியதற்காக தொகுப்பாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி: தினமணி, 15/7/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *