புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்
புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.184, விலை ரூ.140.
தமிழ் இலக்கியத் திறனாய்வுகள், திறனாய்வு செய்பவரின் வாழ்க்கைப் பார்வையிலிருந்து பலவிதமாக வெளிவந்திருக்கின்றன.
இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சிப்பவர்களும், இலக்கியத்தின் வெளிப்பாட்டு அம்சத்தைப் பிரதானப்படுத்தி அழகியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும், இலக்கியம் எந்தக் கருத்தைச் சொல்கிறது என்ற அடிப்படையில் சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே.
ஆனால் இந்நூலின் விமர்சனப் பார்வை சற்றே வித்தியாசமானது. உளவியல் அறிஞர்களான ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோரின் உளவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம் 39’ கதையை இந்நூலாசிரியர் விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு பாத்திரங்களின் மன உணர்வுகள், கதைச் சம்பவங்களின் அடிப்படையில் உளவியல் விமர்சனம் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
‘‘புதுமைப்பித்தன் உளவியலைப் பெரிதும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. எனினும் அவரின் உள இயல்பு கதைகள் வழியே உளவியலைப் பறைசாற்றுகின்றது” என்கிறார் நூலாசிரியர். வித்தியாசமான முயற்சி.
நன்றி: தினமணி, 13/3/2017